தானே புயலில் சேதமடைந்த புதுச்சேரியை இயற்கை பேரிடர் பகுதியாக அறிவிக்க சிபிஎம் கோரிக்கை
புதுச்சேரி: இயற்கையால் சீரழிந்த இயற்கை பேரிடர் பகுதியாக புதுச்சேரியை அறிவிக்க வேண்டும் என்று சி.பி.எம். கோரி்க்கை விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள் புதுச்சேரி மாநில முதல்வர் என்.ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கடந்த 30.12.2011ல் புதுச்சேரியில் இதுவரை யாரும் கண்டிராத பேரழிவை தானே புயல் ஏற்படுத்தியது. 5 நாட்களுக்கு முன்பே 140 கி.மீ வேகத்தில் புதுச்சேரியை தாக்கும் என்பதை அறிந்தும் அதனை எதிர்க்கொள்ளும் அளவுக்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுக்கவில்லை.
புதுச்சேரி முதல்வர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கான உத்தரவுகளை பிறப்பித்த போதிலும், அரசு இயந்திரம் புயல் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை. புயலை எதிர்க்கொள்ள தேவையான அவசர நிதி கூட தயார் நிலையில் இல்லை.
புதுச்சேரியில் இருந்த பழமையான மரங்கள் 75 விழுக்காடு வேரோடு சாய்ந்துவிட்டது. விவசாயம் முற்றிலும் சீரழிந்து விட்டது. குடியிப்பு பகுதி, தொழிற்சாலைகள் உள்பட அனைத்து கட்டுமானங்களும் கடுமையாக சேதமடைந்தது உள்ளது. 90 விழுக்காடு தொழிற்சாலைகள் இயங்காமல் உள்ளன.
எனவே இயற்கையால் சீரழிந்த இயற்கை பேரிடர் பகுதியாக புதுச்சேரியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தானே புயல் பாதிப்பை மதிப்பீடு செய்ய மத்திய அரசு இயற்கை பேரிடர் மதிப்பீட்டுக் குழுவை புதுச் சேரிக்கு விரைந்து அனுப்ப வேண்டும்.
மாநில அரசின் நிதி நெருக்கடி, மக்களின் மறுவாழ்வு நடவடிக்கையின் அவசர தன்மை கருதி மாநில அரசு அளித்துள்ள ரூ2,500 கோடி சேதார மதிப்பீட்டில் 50 விழுக்காடு நிதியை முன்தொகையாக உடனே வழங்க வேண்டும். புயலால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்ட, தற்போது எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மாநிலத்திற்கு தேவையான நிவாரணத் தொகை வாங்கிட உதவி செய்ய வேண்டும். எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி முழு நிவாரணத் தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications