புயல் தாக்கிய புதுவையில் காலரா?-பெண் பலி-குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் விபரீதம்
புதுச்சேரி: புதுச்சேரியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்துள்ளதால் அதனை பருகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அவர்கள் காலரா நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அனைவரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தானே புயல் தாக்குதலால் புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. குடிநீர் ஆதரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கடந்த வாரம் புதுவை உழவர்கரை பூமியான்பேட்டையில் பொதுமக்கள் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நோய் பரவுதலை தடுக்க மருத்துவக் குழு பூமியான்பேட்டையில் முகாமிட்டு சிகிச்சை அளித்தது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இந்நிலையில் முதலியார்பேட்டை தொகுதியிலும் பொதுமக்களுக்கு திடீர் வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. இந்திரா நகர், முத்தமிழ் நகர், பட்டம்மாள் நகர், மாங்காளியம்மன் கோயில் வீதி, உழந்தைகீரப்பாளையம், வன்னியபெருமாள் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளிலும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 85 வயதான காத்தம்மா என்பவர் உயிரிழந்தார்.
குடிநீருடன் கழிவுநீர் கலந்ததால் விபரீதம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தகவல் கிடைத்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
முன்னெச்சரிக்கை இல்லை
இதனிடையே புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் புதுச்சேரி அரசு மேற்கொள்ளவில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததால் அந்தப் பகுதி மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. புயல் அடித்த உடனேயே நகர மற்றும் கிராம பகுதிகளில் குளோரின் கலந்து வினியோகம் செய்து இருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். குடிநீர் பிரிவின் மெத்தன போக்கையே இது காட்டுகிறது.
இது போன்ற சமயங்களில் குடிநீர் பிரிவும், சுகாதாரதுறையும் இணைந்து தண்ணீரை காய்ச்சி குடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும். புதுவை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பார்த்தால் அவர்கள் புயலை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக இல்லை என்பது எங்களுக்கு தெரிகிறது என்றார்.
மருத்துவ குழு முகாம்
இதனையடுத்து சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் கேவி ராமன் நேரில் விசாரித்து அனைவருக்கும் உடனடி சிகிச்சைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பட்டம்மாள் நகரில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு மக்களுக்கு முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர். காலரா பாதித்த பகுதிகளில் உள்ள வாட்டர் டேங்குகளில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு குடிநீரை எடுத்துச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications