நக்கீரன் கோபால் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு-அட்வகேட் ஜெனரல்
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் மீது கோர்ட் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாக தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இத்தகவலை அவர் தெரிவித்தார்.at
அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் உள்பட பலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல நக்கீரன் கொடுத்த புகாரின் பேரில் அதிமுக எம்.எல்.ஏ. அசோக் உள்ளிட்டோர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோபாலும், காமராஜும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இந்த மனுக்கள் எல்லாம் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, நக்கீரன் அலுவலகத்திற்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கோபால் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இதை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நேற்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி கே.பி.கே.வாசுகி ஆகியோர் முன்னிலையில் ஆஜராகி கோபாலின் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதிட்டு கோரிக்கை விடுத்தார்.
அப்போது ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் எழுந்து, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக நக்கீரன் பத்திரிகை தொடர்ந்து அவதூறு செய்தி வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவைப் பற்றி தனிப்பட்ட செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அவரிடம் கருத்து கேட்கவேண்டும் என்று 2006-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை நக்கீரன் கோபால் மீறியுள்ளார். எனவே அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறோம். அந்த வழக்கையும் விரைவாக விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதுபற்றியும் மனுவை தாக்கல் செய்தால் அதையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கும் இன்றைக்கே விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications