2ஜி வழக்கு.. சம்மன்களை வாங்காமல் துபாய்க்கு ஓடிய எஸ்ஸார், லூப் டெலிகாம் அதிபர்கள்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நீதிமன்றம் அனுப்பி சம்மன்களை வாங்க மறுத்து, ஒளிந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான ரூயா மற்றும் கெய்தான் குடும்பத்தினருக்கான சம்மன்களை, அவர்களது வீடுகளில் நீதிமன்றம் ஒட்ட வைத்துள்ளது.
எஸ்ஸார் தொழில் குழுமத்தின் உரிமையாளர்களான அனுஷ்மன் ரூபா, ரவி ரூயா ஆகியோர் மீதும், லூப் டெலிகாம் நிறுவன அதிபர்களான கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி.கெய்தான் ஆகியோர் மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ வழக்குத் தொடர்ந்துள்ளது. இவர்கள் மீது சமீபத்தில் டெல்லி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தது.
இதையடுத்து, கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் துபாய்க்குச் சென்றுவிட்டனர். இவர்களை விசாரணைக்கு வரக் கோரி நீதிமன்றம் அனுப்பிய சம்மன்களை, அவர்களது வீடுகள், அலுவலகங்களில் யாரும் வாங்கவில்லை.
இதையடுத்து இந்த சம்மன்கள் அங்கு ஒட்டப்பட்டுள்ளன.
இந் நிலையில் இவர்களது பாஸ்போர்ட்களை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் சிபிஐ விரைவில் மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.
2008ம் ஆண்டில் வோடபோன் நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளை வைத்திருந்த எஸ்ஸார் நிறுவனம், லூப் டெலிகாமிலும் பெரும் பங்குகளை வைத்திருந்தது. ஒரு மண்டலத்தில் 2ஜி லைசென்ஸ் பெறும் தொலைத் தொடர்பு நிறுவனம் இன்னொரு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 10 சதவீதத்துக்கு மேல் பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்பது விதி.
ஆனால், இந்த விதியை மீறி லூப் டெலிகாமின் பெயரைப் பயன்படுத்தி எஸ்ஸார் நிறுவனம் தனக்கு ஒதுக்கப்பட்டதை விட அதிகமான அளவு ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. இதையடுத்து இந்த இரு நிறுவனங்களையும் 2ஜி வழக்கில் சிபிஐ சேர்த்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications