'ஜெயலலிதா ஓர் அபூர்வ சிந்தாமணிதான்': இரா.செழியன்
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமலேயே மக்களின் பேராதரவை பெற்று ஆட்சியை பிடித்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா ஓர் அபூர்வ சிந்தாமணிதான் என்று தமிழக அரசின் பேரறிஞர் அண்ணா விருது பெற்ற முன்னாள் எம்பி இரா.செழியன் கூறினார்.
திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் அறிஞர்கள் 9 பேருக்கு தமிழக அரசின் சிறப்பு விருதுகளை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். புலவர் வரதராஜனுக்கு திருவள்ளுவர் விருதையும், டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு தந்தை பெரியார் விருதையும், பேராசிரியர் சு.காளியப்பனுக்கு அண்ணல் அம்பேத்கார் விருதையும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.செழியனுக்கு பேரறிஞர் அண்ணா விருதையும்,
பெருந்தலைவர் காமராஜர் விருதை திண்டிவனம் ராமமூர்த்திக்கும், மகாகவி பாரதியார் விருதை ஆர்.பிரேமாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதை கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணனுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை பேராசிரியர் நா.ஜெயப்பிரகாசுக்கும், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதை பேராசிரியர் ஆர்.மோகனுக்கும் வழங்கினார்.
விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழக அரசின் சிறப்பு விருதுகளுக்கு முதல்வர் ஜெயலலிதா தகுதியானவர்களை தேர்வு செய்திருக்கிறார். தமிழ்மொழி மேம்பாட்டுக்கும், தமிழ் அறிஞர்களின் மேம்பாட்டுக்கும் அவர் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தஞ்சையில் 8வது உலக தமிழ் மாநாடு நடத்தியது, தமிழை அறிவியல் தமிழாக அறிமுகப்படுத்தியது, நெடுஞ்சாலைகளில் தமிழில் அறிவிப்பு பலகை, வணிக நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுத்தார்.
தமிழை உலக மொழியாக கொண்டுசெல்லும் வகையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவதற்காக அதற்கான தொகை ரூ.50 லட்சத்தை ஒரே தவணையில் வழங்கியவரும் முதல்வர் ஜெயலலிதா தான்.
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தியவரும் அவர்தான். மக்கள் பணியை ஒரு தவமாக மேற்கொண்டு வருகிறார். ஆக்கப்பூர்வமான சிந்தனையாலும், அறிவுத்திறமையாலும் தமிழையும், தமிழ்நாட்டையும் கட்டிக்காத்து வருகிறார் என்றார்.
விருது பெற்றவர்கள் சார்பில் ஏற்புரை ஆற்றிய இரா.செழியன் பேசுகையில், சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் மக்களின் பேராதரவை பெற்று ஆட்சியை பிடித்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா ஓர் அபூர்வ சிந்தாமணிதான். இருண்ட காலம் நீங்கி தமிழகத்திற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. இதுபோன்ற விடிவுகாலம் இந்தியாவுக்கும் வரவேண்டும். பெண் அறிஞர்களின் பெயர்களிலும் அரசின் சிறப்பு விருதுகளை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications