ரூ. 30 லட்சம் பணத்துடன் வந்த பான் பராக் வியாபாரிகள்-ஐடி அதிகாரிகள் விசாரணை
சென்னை: டெல்லியிலிருந்து ரூ. 30 லட்சம் ரொக்கப் பணத்துடன் விமானம் மூலம் வந்த இரண்டு பான் பராக் வியாபாரிகளை அதிகாரிகள் பிடித்துள்ளனர். அவர்களிடம் ஏது இவ்வளவு பணம் என்று கேட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு வந்த டெல்லி விமானத்தை வருவாய் புலனாய்வு பிரிவினர் கண்காணித்தனர். அப்போது 2 பேர் மீது அவர்களுக்கு சந்தேகம் வந்தது.
இதையடுத்து அவர்களை தடுத்து அவர்கள் வைத்திருந்த சூட்கேஸ்களை சோதனையிட்டனர். அப்போது சூட்கேஸ்கள் நிறைய கட்டுக் கட்டாக பணம் இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டனர். அதை எண்ணியபோது ரூ. 30 லட்சம் இருந்தது தெரிய வந்தது.
இருவரும் யார் என்பது குறித்து விசாரித்தபோது அவர்களது பெயர் நமன் மேத்தா மற்றும் அமன் மேத்தா என்று தெரிய வந்தது. இருவரும் பான் பராக் தொழிலில் ஈடுபட்டுள்ளனராம். அண்ணன் தம்பிகளான இவர்கள் கல்யாணம் ஒன்றுக்கு வந்ததாக தெரிவித்தனர்.
இருப்பினும் பெரிய அளவில் பணத்தை தூக்கிக் கொண்டு அவர்கள் வந்ததால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பெரும் பணத்துடன் பான் பராக் வியாபாரிகள் வந்து சிக்கியதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.