பெண்தர மறுத்ததால் மாணவர் ஆத்திரம் : காதலியின் தாயார் வெட்டிக்கொலை!
சென்னை: சென்னை அடுத்த வண்டலூரில் பெண் தர மறுப்பு தெரிவித்த காரணத்தினால் காதலியின் தாயாரை கல்லூரி மாணவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்துள்ளார்.
வண்டலூர் கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து வருபவர் ஜியாவுதீன். இவரது மனைவி தவுசிக் நிஷா (வயது 39). இவர்களுக்கு ஷாஜிதா (19), ஷர்மிதா (17) என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள இன்னொரு கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
ஷாஜிதாவை அதே கல்லூரியில் படித்து வந்த சந்தானம் (20) என்ற வாலிபர் தீவிரமாக காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வதற்காக பலமுறை வீட்டுக்கு சென்று சந்தானம் பெண் கேட்டுள்ளார். இதற்கு ஷாஜிதாவின் தாய் தவுசிக் நிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை 2 மணியளவில் மீண்டும் தவுசிக் நிஷாவின் வீட்டிற்கு சென்ற சந்தானம் ஷாஜிதாவை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த தவுசிக் நிஷா வேறு மதத்தை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்துக்கு இது ஒத்து வராது. எனவே ஷாஜிதாவை தொந்தரவு செய்வதை விட்டு விடு என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தானம் தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து தவுசிக் நிஷாவை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிவிட்டார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓட்டேரி போலீசார் அங்கு சென்று தவுசிக் நிஷாவின் உடலை கைப்பற்றி செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பதட்டத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ஒரு அரிவாளை சந்தானம் அங்கு விட்டுச் சென்றுள்ளார். அவரது செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திட்டமிட்டு கொலை
தவுசிக் நிஷாவை தீர்த்துக்கட்ட சந்தானம் திட்டம் போட்டு வேலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்கு சந்தானத்தின் நண்பர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். தலைமறைவாகி விட்ட அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
தவுசிக் நிஷாவை கொலை செய்த சந்தானத்தின் தந்தை பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications