சங்கரன்கோவிலில் காங். போட்டியா?: 'தெரியாது' என்கிறார் ஞானதேசிகன்
சென்னை: சங்கரன்கோவில் தொகுதியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா அல்லது திமுகவை ஆதரிக்குமா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் 'எஸ்கேப்' ஆனார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்.
இந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை அறிவித்துவிட்டது, மதிமுகவும் போட்டியிடவுள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே காங்கிரஸை திமுக வெட்டிவிட்டுவிட்டது.
இந் நிலையில் இடைத் தேர்தல் விவகாரத்தில் காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்பது தெரியவில்லை. இதற்கிடையே சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் சங்கரன்கோவில் தொகுதியில், காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் 'தெரியாது' என்று பதிலளித்தார்.
இதையடுத்து 'திமுகவை ஆதரிப்பீர்களா?' என்று நிருபர்கள் கேட்க, முதலில் தேர்தல் கமிஷன் தேதியை அறிவிக்கட்டும். பின்னர் காங்கிரஸ் கட்சியின் முடிவு தெரிவிக்கப்படும் என்றார்.
நடக்கவுள்ள திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது என திமுக முடிவெடுக்குமா என்று கேட்டதற்கு, 'அப்படி எல்லாம் இருக்காது' என்று பதிலளித்தார் ஞானதேசிகன்.
ஜனநாயகத்தை காக்கும் காங்கிரஸ்: ஞானதேசிகன் அறிக்கை:
இந் நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
63-வது குடியரசு தின விழாவை கோலாகலமாக கொண்டாடுகிற இந்த தருணத்தில் அனைவருக்கும் என் சார்பாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் கண்ணெதிரே பல்வேறு நாடுகள் ஜனநாயகத்தை தொலைத்துவிட்டு தடுமாறிக் கொண்டிருக்கிற தருணத்தில் கடந்த 62 ஆண்டுகளாக இந்த நாட்டு ஜனநாயகமும், மக்களாட்சி தத்துவமும் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையும் சுதந்திரமான நீதித்துறையும், அச்சமில்லாத பத்திரிகை சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. வாக்குரிமை மூலம் ஆட்சி மாற்றங்களும் நிகழ்த்துகின்ற அற்புத ஜனநாயகத்தை இந்த நாடு பேணிக் காத்து வருகிறது.
இந்த சுதந்திரமான ஜனநாயக சுகத்தை பேணிக் காப்பதில் பெரும்பங்கு வைத்துக் கொண்டிருப்பது காங்கிரஸ் பேரியக்கமே என்பதில் காங்கிரஸ் நண்பர்கள் பெருமிதம் கொள்ளலாம்.
வரும் காலங்களில் ஜாதி, மத, மாநில வேறுபாடுகளை அகற்றிவிட்டு கலாச்சாரத்தையும், மொழியையும் பேணிக் காக்கிற அதேநேரத்தில் இந்திய நாட்டின் ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும், மக்களாட்சி தத்துவத்தையும் பேணிக் காப்போம் என்று இந்த நன்நாளில் அனைவரும் சபதம் ஏற்போம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications