''பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர் பரூக்'': கருணாநிதி
சென்னை: கேரள கவர்னர் பரூக் மரைக்காயர் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கடந்த 1968ம் ஆண்டு திமுகவில் இணைந்து தீவிரமாக கழக பணியாற்றி 5 ஆண்டு காலம் புதுவை மாநில முதலமைச்சராக திறம்பட பணியாற்றியவரும் 1991ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அரசில் சுற்றுலா மற்றும் விமான துறையில் இணை அமைச்சராக பணியாற்றியவரும் 2004ல் சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதராக பணியாற்றியவரும்
2010ம் ஆண்டு முதல் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பணியாற்றியவரும் கடந்த செப்டம்பர் முதல் கேரள மாநில ஆளுநராக பணியாற்றி வந்தவருமான அருமை நண்பர் எம்ஓ.எச்.பரூக் மரைக்காயர் சில நாட்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்து அதிலிருந்து மீளாமல் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
பரூக் பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர். அவர் கழகத்திலே பணியாற்றிய காலத்திலும் பிறகு மத்திய அமைச்சராக பணியாற்றிய காலத்திலும் அடிக்கடி என்னை சந்திக்க கூடியவர்.
ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட போது கூட என்னை இல்லத்திலே வந்து சந்தித்து அளவளாவி விட்டுதான் சென்றார். என்னிடம் தனி அன்பு கொண்டு பாசத்தோடு பழகி வந்த அருமை நண்பர் பரூக்கை இயற்கை இவ்வளவு விரைவில் பறித்துக் கொண்டு போய் விடும் என்று நான் எண்ணிடவில்லை.
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications