Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jayalalithaa
சென்னை: தானே புயல் நிவாரணப் பணிகளில் எனது அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, உலக சாதனை படைத்துள்ளது. புயல் நிவாரணம் தொடர்பாக எதிர்க்கட்சித் துணை தலைவரே அசந்து போகும் அளவிலான அறிவிப்புகளை பிப்ரவரி 4ம் தேதி எதிர்பார்க்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் புயல் நிவாரணப் பணிகளைக் குறை கூறிப் பேசினார். இதற்கு முதல்வர் ஜெயலலிதா நீண்டதொரு விளக்கம் அளித்தார்.

மேலும் தமிழகத்தைப் போல எங்காவது போர்க்கால அடிப்படையில் புயல் நிவாரணப் பணிகளை நிறைவேற்றியுள்ளனர் என்பதைக் காட்ட முடியுமா என்றும் பண்ருட்டியாருக்கு சவால் விடுத்தார்.

முதல்வரின் பேச்சு முழு விவரம்:

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தானே புயலால் ஏற்பட்ட சேதங்களைப்பற்றி இங்கே குறிப்பிடும்போது, தானே இது வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட சேதம் என்பதை குறிப்பிட்டார்.

யாருமே இதுவரை கண்டிராத அளவிற்கு 35,000க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சூறாவளி காற்றில் வீசி அடிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்து கிடந்தன.

எல்லாமே சீரழிக்கப்பட்டு விட்டது. இயல்பான வாழ்க்கை நடத்துவதற்கு என்னென்ன கட்டமைப்புகள் தேவையோ, என்னென்ன கட்டமைப்புகள் அரசால் அங்கே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்ததோ, எல்லாமே சீர்குலைந்து விட்டது. ஆனால், 2, 3 நாட்கள் வரை எந்தப் பணியுமே நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சொல்வது தவறு. அதை ஆணித்தரமாக மறுக்கிறேன்.

சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களையெல்லாம், போர்க்கால அடிப்படையில், 24 மணி நேரத்திற்குள் அகற்றி விட்டோம். மரங்களை அகற்றாமல், வண்டி, வாகனங்கள் எப்படிச் செல்லமுடியும்? குடிநீரை எப்படிக் கொண்டு கொடுக்க முடியும்? சாப்பாட்டுப் பொட்டலங்களை எப்படிக் கொண்டுபோய்க் கொடுக்க முடியும்? ஆகவே, அதைத் தலையாயப் பணியாக மேற்கொண்டு, 24 மணி நேரத்திற்குள் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி விட்டோம் என்பதை மீண்டும் நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.

மாவட்ட நிர்வாகமும் தன்னால் இயன்ற பணிகளை, உடனடியாக மேற்கொண்டது. தகவல் தொடர்பே இல்லை, துண்டிக்கப்பட்டு விட்டது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவரே கூறுகிறார். ஆகவே, உடனடியாக இயன்ற இடங்களில் எல்லாம், உணவுப் பொட்டலங்களும், குடிநீரும் விநியோகிக்கப்பட்டன. படிப்படியாக நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்கள், வீடுகளை இழந்த மக்களெல்லாம் பொது இடங்களில், பள்ளிக் கூடங்களில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு உணவும் வழங்கப்படவில்லை; எந்த நிதியுதவியும் செய்யப்படவில்லை என்று சொல்வதெல்லாம் தவறு. புள்ளி விவரங்கள் இருந்தால், புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு பேச வேண்டும். இல்லையென்றால், பொத்தாம்பொதுவாக எதுவுமே நடைபெறவில்லை என்று சொல்வது மிகவும் எளிதான ஒரு காரியம்; அப்படி இல்லை.

அண்டை மாநிலமாக உள்ள புதுச்சேரியில்கூட, அங்குள்ள அமைச்சர்கள்கூட, அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட, தமிழ்நாட்டில் நடைபெற்ற பணிகளைப் பாராட்டியிருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் சந்திப்பிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள். புதுச்சேரி முன்னாள் முதல்வர்கூட பாராட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற பணிகளைப் போல், நிவாரணப் பணிகளைப்போல் இதுவரை எங்குமே நடைபெறவில்லை என்றும் அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, கடலூர் மாவட்டத்திலும், விழுப்புரம் மாவட்டத்திலும், நாகை மாவட்டத்திலும் ஏற்பட்ட சேதங்களைப் பார்க்கின்றபோது, சாதாரணமாக எந்த அரசாக இருந்தாலும், எந்த மாநில அரசாக இருந்தாலும், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீண்டும் கொண்டுவருவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள், 7 மாதங்கள் பிடித்திருக்கும். ஆனால், ஒரே மாதத்திற்குள் அதைச் செய்து முடித்திருக்கிறோம். மின்சார சப்ளை, மின்சார விநியோகம் ஒட்டுமொத்தமாக அங்கே சீரழிக்கப்பட்டு விட்டது.

இதுவரை தமிழ்நாட்டில் எங்குமே இதுபோன்ற சேதத்தை நாங்கள் பார்த்ததில்லை; யாருமே பார்த்ததில்லை. அங்குள்ள மக்களே மீண்டும் மின்சார சப்ளையை அங்கே ஏற்படுத்திக் கொடுப்பதற்குக் குறைந்தபட்சம் 4 மாதங்கள் பிடிக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், ஒரு மாத காலத்திற்குள்ளேயே மீண்டும் அங்கே மின்சாரத்தைக் கொடுத்து, போர்க்கால அடிப்படையில் அண்டை மாவட்டங்களிலிருந்து எல்லாம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களை அங்கே கொண்டுவந்து, நம்மிடம் நிதி இல்லை என்றாலும், எப்படியோ திரட்டி, 300 கோடி ரூபாய் அளவிற்கு மின்சார வாரியத்திற்குக் கொடுத்து, அண்டை மாநிலங்களிலிருந்தெல்லாம் மின்கம்பங்கள் வரவழைத்து, தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நாங்கள் அங்கே நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, பொங்கல் வருவதற்குள் உள்ளூர் மின் விநியோகம் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அவற்றையெல்லாம் எடுத்து, இதுவரை உலக சாதனையாக நாங்கள் நிகழ்த்திக் காட்டி, பொங்கல் வருவதற்குள் அனைத்து வீடுகளுக்கும் அங்கே மின்சாரம் வழங்கப்பட்டது.

அனைத்து வேளாண் பம்ப்செட்டுகளுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் அங்கே மின் சப்ளை வழங்கப்பட வேண்டுமென்று உத்தரவிட்டு, அதுவும் செய்யப்பட்டு விட்டது. இதுபோல் செயல்பட்ட ஒரு மாநில அரசை, எதிர்க்கட்சித் துணைவரால் சுட்டிக்காட்ட முடியுமா என்று நான் சவால் விடுகிறேன்.

மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை; பாராமுகமாக இருந்தது என்பதை மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களே ஒப்புக் கொள்கிறார். அப்படியிருக்கும்போது, மாநில அரசு தன்னிடம் இருக்கின்ற நிதியை வைத்துக்கொண்டு, தன்னிடம் இருக்கின்ற ஆட்களை வைத்துக்கொண்டு, தன்னிடம் இருக்கின்ற நிதியாதாரங்களை வைத்துக்கொண்டு, இந்த அளவிற்குச் செயல்பட்டிருக்கிறோம் என்று சொன்னால், யாராக இருந்தாலும், மனம் திறந்து, மனமுவந்து நம்மைப் பாராட்ட வேண்டும்.

இன்னும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். ஏற்பட்டிருக்கிற சேதம் வரலாறு காணாத சேதம். ஆனால், பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறோம், எந்தளவிற்குச் செய்திருக்கிறோம் என்பதைப் புள்ளி விவரங்களுடன் 4 ஆம் தேதி என்னுடைய பதிலுரையில் நான் தெரிவிக்கிறேன் என்றார்.

பிறகு பண்ருட்டியார் தொடர்ந்து பேசினார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட ஜெயலலிதா, நீண்ட கால குறுகிய காலத் திட்டங்கள் எல்லாம் என்னுடைய தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துவிட்டோம். அப்படியே அந்த திட்டங்களை வெளியிடாததுதான் நான் செய்த தவறு.

கவர்னர் உரை மீது நடைபெறும் விவாதத்திற்கு பதிலளிக்கும் போது அந்த திட்டங்கள் குறித்து நான் வரும் 4ம் தேதி அறிவிப்பேன். நான் வெளியிடும் அறிவிப்புகளை பார்த்து எதிர்கட்சிகள் அசந்து போகும் நிலைமை உருவாகும் என்றார்.

காதைக் கிழித்த மேசைத் தட்டல்

முதல்வர் விளக்கம் அளித்துப் பேசியபோது பலமுறை அவரது பேச்சை வரவேற்று ஆளுங்கட்சியினர் மேசைகளை பலம் கொண்டு தட்டி வரவேற்றதால் அவையில் மேசைத் தட்டல் ஒலி காதைப் பிளந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+