ஜெயலலிதா புகழையும், மாண்பையும் களங்கப்படுத்துகிறார்: விஜயகாந்த் மீது அதிமுகவினர் போலீசில் புகார்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கும், புகழுக்கும், மாண்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தின் அதிமுக சிறுபான்மைப் பிரிவு தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான வி. ஞானமுத்து, வழக்குரைஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது புகார் கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2ம் தேதி கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் முதல்வரின் ஆட்சிக்கும், புகழுக்கும், மாண்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசினார். மேலும் முதல்வர் மீது அவதூறு பரப்புவதோடு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், வதந்தி பரப்பும் உள்நோக்கத்தோடும், கெட்ட எண்ணத்தோடும் பேசினார். எனவே தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய விஜயகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.