மரக்காணம் அருகே பஸ் மேற்கூரையில் பயணித்த +1 மாணவர் கீழே விழுந்து பலி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணித்த பிளஸ் 1 மாணவர் தலையில் வயர் தட்டி கீழே விழுந்து பலியானார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரின் மகன் சரவண குமார் (17). மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்காக மரக்காணம் பேருந்து நிலையத்திற்கு சென்றார்.
அப்போது ஆலத்தூர் செல்லும் பேருந்து வந்தது. அதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சரவண குமார் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தார். அவருடன் 20க்கும் அதிகமான மாணவர்களும் மேற்கூரையில் அமர்ந்தனர். பேருந்து அங்கிருந்து கிளம்பி வேகமாகச் சென்றது. சிறிது தூரம் சென்றதும் கேபிள் வயர் வருவதைப் பார்த்த மற்ற மாணவர்கள் தலையைக் குனிந்து கொண்டனர். அதை கவனிக்காத சரவண குமார் தலையில் வயர் பட்டு அவர் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை சிகிச்சைக்காக ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications