துப்பட்டா முக்காடு, மரத்தடியில் அன்புப் பரிமாற்றம்-களை கட்டிய காதலர் தினம்!!
சென்னை: உலகெங்கும் கொண்டாடப்பட்ட காதலர் தினம் இன்று தமிழகத்திலும் கொண்டாடப்பட்டது. காதல் ஜோடிகள், புதிதாக திருமணமான ஜோடிகள் என பல தரப்பட்டவர்களும் தங்களது அன்பைப் பரிமாறிக் கொண்டனர். சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்டவற்றில் காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது.
அன்பைப் பகிர்ந்து கொள்ளும் தினமாக காதலர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. காதல் ஜோடிகள் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட அத்தனை பேருமே இந்த தினத்தை தங்களது அன்பைத் தெரிவிக்கும் தினமாக கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
சென்னையில் மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் காதல் ஜோடிகளின் வருகை களை கட்டியிருந்தது. இதேபோல மகாபலிபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.
காதலர் தினத்தை எதிர்க்கும் அமைப்புகளால் இவர்களுக்குப் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காக போலீஸார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அதேசமயம், பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று காதல் ஜோடிகளுக்கும் போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். எனவே அவர்களையும் மப்டி போலீஸார் கண்காணித்து வந்தனர்.
ஊட்டியில் அலைமோதிய கூட்டம்
ஊட்டியில் கடந்த சில நாட்களாகவே காதல் ஜோடிகள் வருகை தொடங்கி விட்டது. காதலர் தினத்தை இங்கு சிறப்பாக கொண்டாடும் திட்டத்துடன் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காதல் ஜோடிகள் ஊட்டியை மொய்த்னர்.
பலர் வெளியூர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்திருப்பதைக் காண முடிந்தது. ஹோட்டல்களில் தங்கிக் கொண்டு ஊட்டியில் உள்ள முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்த்தபடி காதலர் தினத்தை அவர்கள் கொண்டாடினர்.
தொட்டபெட்டா, படகு இல்லம், ரோஜாப் பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் காதல் ஜோடிகளை நிறையக் காண முடிந்தது.
இதுதவிர ஊட்டி சூட்டிங் ஸ்பாட், குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதிகளிலும் ஏராளமான காதல் ஜோடிகளை காணமுடிந்தது.
காதல் பூங்காவாக மாறிய தாவரவியல் பூங்கா
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு இன்று வந்தவர்கள் இது தாவரவியல் பூங்காவா இல்லை, காதலர் பூங்காவா என்று குழம்பிப் போய் விட்டனர். அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் காதலர்கள்தான். கொத்துக் கொத்தாக காதலர்கள் கூட்டம் காணப்பட்டது.
புதுமணத் தம்பதிகளும் கூட காதலர் தினத்தையொட்டி இன்று பெருமளவில் வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. கழுத்தில் பளிச்சிட்ட புதுத் தாலியுடன், கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு காதலர்களை வேடிக்கைப் பார்த்தபடியும், தங்களது புது அன்பை வளர்த்தபடியும் வெட்கச் சிரிப்புடன் சென்றனர் புதுப் பெண்கள்.
துப்பட்டா முக்காடு
காதலர் தினமான இன்று காதலர்கள் பெருமளவில் ஜோடி ஜோடியாக கொணடாடினாலும் கூட பலருக்கு உள்ளூர வீட்டுக்குத் தெரிந்து விடுமோ என்ற பயம் இருந்தது.இதனால் பல ஜோடிகள் குறிப்பாக பெண்கள், தங்களது துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடியும், பைக்குகளில் காதலர்களுடன் சென்றவர்கள், முதுகோடு ஒட்டியபடியும் சென்றதைக் காண முடிந்தது.
மேலும் பூங்காக்களுக்கு வந்தவர்கள் பலர் யாரும் தங்களை அடையாளம் கண்டு விடாதபடிக்கு முகத்தை மறைத்தபடியும், செடி கொடிகளுக்குள் ஒண்டிக் கொண்டும் அன்பைப் பரிமாறிக் கொண்டு காதலை வளர்த்த சுவாரசியத்தையும் காண முடிந்தது.












Click it and Unblock the Notifications