மதுரையில் பஸ்-வேன் பயங்கர மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் பலி
மதுரை: குல தெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றவர்களின் வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம் ராஜலட்சுமி நகர் ஆர்.எம்.டி.சி காலனியைச் சேர்ந்தவர் நடராஜன்(60). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது மனைவி அருள்ஜோதி(55). அவர்களின் மகன் சுரேஷ்குமார். பி.இ. பட்டதாரி. நேற்று சிவராத்திரி என்பதால் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்த புதுப்பட்டியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வாடகை வேனில் செல்ல தீர்மானித்தனர்.
அவர்களுடன் நடராஜனின் அண்ணன் நாராயணசாமி(67), அவரது மகன் சரவண பெருமாள்(32) ஆகியோரும் கோவிலுக்கு செல்லும் வேனில் ஏறிக் கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரை சேர்ந்த ராமலிங்கம்(32) வேனை ஓட்டினார்.
மதுரை மாவட்டம் கப்பலூர் பாலத்தை நேற்று காலையில் வேன் கடந்தது. அதன்பிறகு கருவேலம்பட்டி-சூரக்குளம் விலக்கு பிரிவு அருகே சென்றபோது மதுரையில் இருந்து வத்திராயிருப்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனில் பயணித்த நடராஜன், அருள்ஜோதி, நாராயணசாமி, சுரேஷ்குமார், ஓட்டுநர் ராமலிங்கம் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். படுகாயமடைந்த சரவண பெருமாள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உருக்குலைந்த நிலையில் இருந்த வேனில் இறந்த நிலையில் இருந்த உடல்களை மீ்ட்டனர். மேலும் விபத்தில் இறந்த சுரேஷ்குமாரின் பயோடேட்டா, போட்டோ உள்ளிட்ட ஆவணங்களும் வேனில் இருந்து எடுத்தனர்.
இது குறி்த்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.