குடிபோதையில் கர்ப்பிணியிடம் சில்மிஷம்: கோஷ்டி மோதலில் 3 பேர் காயம், 10 பேர் கைது
சேலம்: சேலத்தில் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த கர்ப்பிணியிடம் சில்மிஷம் செய்ததால் பெரிய கோஷ்டி மோதலே வெடித்து விட்டது. இந்த மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (24). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு திருமணமானது. அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
நேற்றிரவு கணவனும், மனைவியும் ஜோடியாக படம் பார்க்க இளம்பிள்ளையில் உள்ள திரையரங்கிற்கு சென்றுள்ளனர். அங்கு படம் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு பின் வரிசையில் குடிபோதையில் அமர்திருந்த ராசிக்கவுண்டனூரைச் சேர்ந்த செல்வம் (37) பிரகாஷின் மனைவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் செல்வத்தைக் கண்டித்துள்ளார்.
உடனே செல்வம் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து அந்த அப்பாவி கணவரைத் தாக்கியுள்ளார். அதை தடுக்க முயன்ற க்ர்ப்பிணிக்கும் அடி விழுந்தது. அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷின் நண்பர்கள் அவர் அடி வாங்குவதைப் பார்த்து அதிர்ந்தனர். உடனே அவர்கள் ஓடி வந்து செல்வம் மற்றும் அவரது நண்பர்களைத் தாக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த காகாபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த பிரகாஷ், அவரது மனைவி மற்றும் செல்வத்தை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்வத்தின் நண்பர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.