மாற்றத்துக்கான ஆண்டாக 2014 திகழும்: அன்னா ஹசாரே ஆரூடம்
அகமது நகர் (மகாராஷ்டிரா): எதிர்வரும் 2014-ம் ஆண்டு மாற்றத்துக்கான ஆண்டாக இருக்கும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே ஆரூடம் கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலத்தின் அகமது நகரில் தேசிய அளவிலான இளைஞர் முகாமைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவ்து:
இந்திய இளைஞர்களின் மனநிலையான படிப்படியாக மாறிக்கொண்டே இருக்கிறது. 2014-ம் ஆண்டு நிச்சயமாக மாற்றத்தை காண முடியும்.
இளைஞர்கள் முயற்சித்தால் நிச்சயமாக மாற்றத்தை உருவாக்க முடியும்.நாட்டின் முன்பு உள்ள தற்போதைய ஒவ்வொரு பிரச்சனைக்கும் நாட்டின் அமைப்பு முறையையும் அரசு மற்றும் அரசியல் கட்சிகளையும் குறைகூறக் கூடாது.
ஒவ்வொருவருமே தனிப்பட்ட முறையில் முயற்சித்தால் பின் தங்கியுள்ளோர் முன்னேற்றம் காண முடியும்.
கடந்த 40 ஆண்டுகளாக நான் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறேன். நாடு இப்போது எனக்கு ஆதரவாக இருக்கிறது என்றார் அவர்.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலை மனதில் கொண்டே ஹசாரே இக்கருத்துகளைத் தெரிவித்து வருவதாக காங்கிரஸ் தரப்பு விமர்சனம் செய்து வருகிறது.