ஜெயலலிதாவின் சாதனையை சொல்லி சங்கரன்கோவிலில் ஓட்டு கேளுங்கள்-ஓ.பன்னீர்செல்வம்
கோவில்பட்டி: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது,
நாம் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எங்கு சென்றாலும் 2 காருக்கு மேல் ஊர்வலமாக செல்லக் கூடாது. கடந்த கால திமுக குடும்ப ஆட்சியின் அவலங்களையும், ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகியவற்றையும், கடந்த 8 மாத ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மூலம் செய்யப்பட்ட சாதனைகளையும் கூறி ஓட்டு கேட்க வேண்டும்.
தமிழகத்தை உலக வரைபடத்தில் இடம் பெறச் செய்யும் அளவிற்கு முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி நடக்கின்றது. கடந்த சட்டசபைத் தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். உள்ளாட்சித் தேர்தலிலும், தற்போதும் தனித்து போட்டியிடுகிறோம். எனவே கட்சியினர் கடுமையாக உழைத்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தூர்பாண்டியன், செல்லப்பாண்டியன், ராஜேந்திர பாலாஜி, வேட்பாளர் முத்துச்செல்வி, தேர்தல் பொறுப்பாளர்கள் உள்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.