வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி - சென்னை நபர் கைது
சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் இருந்து சுமார் ரூ.40 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அடையாறு காந்தி நகரை சேர்ந்த லியோ ஆண்டனி ஜோசப்(45). கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் லியோ கன்சல்டன்ட என்ற நிறுவனம் மூலம் பலரையும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக விளம்பரம் செய்தார்.
இதனை நம்பிய பலரும் இந்நிறுவனத்தில் வெளிநாடு செல்வதற்காக பணம் கட்டி ஏமாந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஆலந்தூரை சேர்ந்த திராவிடமணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் போலீசார் லீயோ ஆண்டனி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இத்தகவலை அறிந்த லியோ ஆண்டனி, தனது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் ஆண்டனியின் ஆசை வார்த்தையில் ஏமாந்தவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பணத்தை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திரும்ப கொடுத்துவிடுவதாக லியோ ஆண்டனி நீதிமன்றத்தில் தெரிவித்தார். எனவே நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் லியோ ஆண்டனி கொடுக்கப்பட்ட காலகெடு கடந்தும் யாருக்கும் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.
இது குறித்து எண்ணூரைச் சேர்ந்த கே.அன்வர் ஷா என்பவர் அளித்த புகாரின் பேரில் லியோ ஆண்டனி மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கீழ்ப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் கே.ராஜாராம் தலைமையிலான தனிப்படை போலீசார், லியோ ஆண்டனியை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில், லியோ ஆண்டனி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், மொத்தம் 70 பேரிடம் இருந்து ரூ.40 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications