சட்டசபையைக் கலைக்க மாயாவதி திடீர் பரிந்துரை- ஏன்?

உத்தரப் பிரதேசத்தில் நடந்த பல கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன. இத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது. சமாஜ்வாடி கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். அடுத்த இடத்தைத்தான் பகுஜன் சமாஜ் கட்சி பெறும் என அனைத்து எக்சிட் போல்களும் கூறி விட்டன.
இதனால் மாயாவதி ஆட்சியிலிருந்து இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் தனது அமைச்சரவையைக் கூட்டி, சட்டசபையைக் கலைக்கும் முடிவை எடுத்து அதை ஆளுநருக்குப் பரிந்துரையாக அனுப்பி வைத்துள்ளார் மாயாவதி.
இந்த முடிவு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் முன்கூட்டியே இப்படிச் செய்தார் மாயாவதி என்பது அனைவருக்கும் புரியவில்லை. ஆனால் சில உள்நோக்கங்களுடன்தான் இப்படி முடிவெடுத்துள்ளார் மாயாவதி என்று கூறப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கையின்போது தனது ஆட்சி பறி போனால், அடுத்த ஆட்சி அமையும் வரை தற்காலிக முதல்வராக தான் பதவியில் நீடிக்க இந்த சட்டசபை கலைப்பு உதவும் என்பது மாயாவதியின் ஒரு திட்டம்.
மேலும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தனது கட்சி எம்.எல்.ஏக்கள் உடனடியாக கட்சி தாவி வேறு கட்சிக்கு, குறிப்பாக சமாஜ்வாடிக் கட்சிக்கு ஆதரவு தருவதைத் தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் 2007 தேர்தலில் மட்டும்தான் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைத்தது. மற்ற தேர்தல்களில் எல்லாம் அது குறைந்த எம்.எல்.ஏக்களையே பெற்று வந்தது. அப்போதெல்லாம் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவலில் புதிய வரலாறு படைத்தவர்கள் என்பது நினைவிருக்கலாம்.
மாயாவதி பரிந்துரைத்திருந்தாலும் கூட முடிவெடுப்பது குறித்து ஆளுநர் அவசரம் காட்ட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதும் சுலபமானதல்ல என்று கூறப்படுகிறது.
எனவே வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகும் சில நாட்கள் வரை மாயாவதி முதல்வர் பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியில் சிலர், மாயாவதி கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். சமாஜ்வாடியை விட மாயாவதியை நம்பலாம் என்பது அவர்களின் கருத்தாகும். எனவே நாளைய வாக்கு எண்ணிக்கை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications