சமாஜ்வாதி கட்சியில் பட்டிமன்றம்: முதல்வராவது முலாயமா? மகன் அகிலேஷா?

403 இடங்களை கொண்ட உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு நடந்த 7 கட்டத்தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மொத்த வாக்குப்பதிவு 60 விழுக்காடு ஆகும். இந்தத் தேர்தலில் நேற்று முன்தினம் ஏழாவது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை பல்வேறு அமைப்புக்கள் நடத்தின. ஆனால் அவை அனைத்துமே சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என கணித்துள்ளன.
ஹெட்லைன்ஸ் டூடே கருத்துக்கணிப்பில் சமாஜ்வாடி கட்சிக்கு 195-210 இடங்கள், ஸ்டார் நிïஸ் சானல் 183 இடங்கள். இந்தியா டி.வி. 137-145 இடங்கள், நியூச் 24 சானல் 185 இடங்கள் கிடைக்கும் என கணித்துள்ளன. எப்படி இருப்பினும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலித்து, சமாஜ்வாதி கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
முலாயமா?அகிலேஷா?
நாளைய வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது பற்றி முலாயம் சிங்கின் மகனும், சட்டசபை தேர்தலில் நட்சத்திர பிரசாரகராக விளங்கி, வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தவர் என்று அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிற அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவிக்கையில், "சமாஜ்வாதி கட்சியில் உள்ள அனைவருமே நேதாஜிதான் (முலாயம் சிங்) முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனது வேலை பிரசாரம் செய்வதுதான். அதை நான் முடித்து விட்டேன். இதில் (யார் முதல்வர் என்பதில்) யூகங்கள் தேவையற்றவை'' என்றார். தேர்தல் பிரசாரத்தின்போதும் தந்தை முலாயம் சிங்கைத்தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறி அகிலேஷ் யாதவ் பிரசாரம் செய்தார்.
அகிலேஷ்க்கு ஆதரவு
ஆனால் கட்சியின் உத்தரபிரதேச மாநில செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், " கட்சியின் மாநிலத்தலைவர் அகிலேஷ் யாதவ்தான் கட்சியின் முதல்வர் வேட்பாளர். அகிலேஷ் யாதவ் தான் பிரச்சினைக்கு இடமில்லாத தேர்வு, அகிலேஷ் யாதவ்வைத்தான் தேர்தலின்போது கட்சி இளைய தலைவராக முன்னிலைப்படுத்தியது. அவரால்தான் இளைய தலைமுறையினரின் ஓட்டு கட்சிக்கு கிடைத்துள்ளது. என்றார்.
கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், முலாயம் சிங்கின் சகோதரருமான ராம்கோபால் யாதவ், "இளமைத்துடிப்பும், ஆற்றலும் வாய்ந்த அகிலேஷ் யாதவ்தான் முதல்வர்பதவிக்கு ஒரே தேர்வு'' என்று கூறி உள்ளார்.
கட்சியின் மூத்த தலைவர்களான அஜம்கான், சிவபால் சிங் யாதவ் ஆகிய இருவரும் முலாயம் சிங்தான் முதல்வர் பதவி வேட்பாளர் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிவபால் சிங் யாதவ் கூறும்போது, "சட்டசபை உறுப்பினர்களின் இயல்பான தேர்வு முலாயம் சிங்தான்'' என கூறி உள்ளார். இதை அஜம்கானும் ஆதரித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் அடுத்த முதல்வர் முலாயம் சிங்கா அல்லது அவரது மகன் அகிலேஷ் யாதவ்வா என்று பட்டிமன்ற விவாதம் போல கேள்வி எழுந்து நின்றாலும், இருவருமே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை, இருவருமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications