நாங்களும் 'மாஸ்' காட்டுவோம்ல... 27 எம்.எல்.ஏக்களையும் சங்கரன்கோவிலில் இறக்கிய தேமுதிக!
சங்கரன்கோவில்: இடைத்தேர்தலையொட்டி சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்ய அதிமுக அத்தனை அமைச்சர்களையும் அனுப்பி வைத்துள்ளது போன்று தேமுதிக எம்.எல்.ஏ.க்களை அனுப்பி வைத்துள்ளது. இரு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
சங்கரன்கோவில் தொகுதிக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதி்முக வேட்பாளர் முத்துசெல்வி, தி்முக வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், தேமுதிக வேட்பாளர் முத்துகுமார், மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார், பாஜக வேட்பாளர் முருகன், அகில இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் கணேசன், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் நாகேஷ் உள்பட 7 அரசியல் கட்சிகளும், சுயேட்சை சார்பில் அய்யலு, ஆறுமுகம், உடையார், சங்கர், பெருமாள், வெள்ளதுரை உள்ளிட்ட 13 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை தக்க வைக்க அதி்முக அமைச்சர்கள் 32 பேர் உள்பட 42 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு சங்கரன்கோவிலில் முகாமிட்டு தீவிர பணியாற்றி வருகின்றனர். இதுபோல் திமுக சார்பில் தென்மண்டல அமைப்பு செயலாளர் அழகிரி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தேர்தல் களத்தில் குதித்து திமுக வேட்பாளர் வெற்றிக்கு கடுமையாக பாடுபட்டு வருகின்றனர்.
மேலும் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று வேட்பாளர் சதன் திருமலைகுமாருக்கு ஆதரவு திரட்டி வருகிறார். வைகோ செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிகவும் தன் பங்குக்கு பலம் காட்டி வருகிறது. அக்கட்சியின் 27 எம்.எல்.ஏ.க்களும், 57 மாவட்ட செயலாளர்களும் ஒட்டுமொத்தமாக சங்கரன்கோவிலில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சங்கரன்கோவில் மக்கள் எத்தனை எத்தனை கட்சிகளடா, அதில்தான் எத்தனை எத்தனை கூட்டமடா என்று பாட்டுப் பாடாத குறையாக வேடிக்கை பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications