தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது- கூடங்குளம் குறித்து முக்கிய விவாதம்!

2012-2013-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா துறை வாரியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில், துறை வாரியான திட்டங்கள், அவற்றிற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 10.15 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூடியது. சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்திற்கு கிட்டத்தட்ட அத்தனை அமைச்சர்களுமே அங்கு போயிருந்தனர். அவர்கள் அத்தனை பேருமே இன்றுகாலை அமைச்சரவைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
இன்றைய கூட்டத்தில் மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுவதாக தெரிகிறது. கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம், தமிழக மின்நிலவரம், பட்ஜெட் ஆகியவையே அது.
கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக இனியன் தலைமையிலான குழு தமிழக அரசிடம் ஏற்கனவே தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதுகுறித்தும் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
அதேபோல தமிழகத்தை வாட்டி வரும் மின் பற்றாக்குறை, மின்தடை குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
மேலும் தமிழக அரசின் பட்ஜெட் குறித்தும் முக்கிய விவாதம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications