மினி லோடு ஆட்டோவில் ஏறி அதிமுகவுக்காக குயிலி, செந்தில், இப்ராகிம் ராவுத்தர் பிரசாரம்

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. அதிமுக நடிகர், நடிகைகள் தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.
வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஓட்டுப் போடுமாறு கேட்டு, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்து இவர்கள் பிரசாரம் செய்தனர். செந்தில், குயிலி, இப்ராகிம் ராவுத்தர் ஆகியோருடன் இயக்குநர் லியாகத் அஏலிகான், நடிகர் ஜெய சூரியகாந்த் போன்றோரும் பிரசாரம் செய்தனர்.
செந்தில் பேசுகையில்,
தி.மு.க. ஆட்சி செய்தபோது மக்களை பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்களாகிய நீங்கள் தான் குடும்பம். எப்போதும் உங்களுக்கு நன்மைகள் செய்யும் நோக்கத்துடன் இருப்பார்.
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. அப்போது மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு வந்த தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டினால் தான் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள மின்வெட்டு பிரச்சினையை முதல்வர் ஜெயலலிதா விரைவில் தீர்த்து வைப்பார்.
தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை உள்பட அனைத்து துறைகளிலும் கடனாக்கி சென்று விட்டனர். டெல்லியில் சோனியா காந்தியைத்தான் நம்பி தி.மு.க இருக்கிறது. தமிழகத்தில் குஷ்புவை நம்பித்தான் தி.மு.க. உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வைகோவுக்கு 12 இடங்கள் கொடுப்பதாக ஜெயலலிதா கூறினார். ஆனால் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார். தற்போது ஒரு இடத்துக்காக வெளியே அலைந்து கொண்டு இருக்கிறார்.
அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வியை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். அவர் கிராமத்தில் உள்ள குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications