கன்னியாகுமரி மீனவர்கள் மீது நடுக் கடலில் துப்பாக்கிச் சூடு- சுட்டது யார்?
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கப்பலில் வந்த ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அந்தக் கப்பலில் வந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
கொல்லம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் மீது, இத்தாலி கப்பலில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 மீனவர்கள் உயிரிழந்தனர். இதேபோல கேரள மாநிலம் செர்தாலா அருகே சில தினங்களுக்கு முன்பு மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதியது. இதில் அந்த அந்தபடகு கவிழ்ந்து அதில் இருந்த 2 மீனவர்கள் பலியானார்கள், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்குக் காரணம் சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. கொல்லங்கோடு அருகே வள்ளவிளை குருசடி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தூஸ் (58), இவருக்கு சொந்தமான என்ஜின் படகில், இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சூசை அடிமை, பிளோரன்ஸ் மற்றும்ம இன்னொருவர் மீன் பிடிக்க சென்றனர். இவர்களுடன் ஏசுதாசன் என்பவருக்கு சொந்தமான படகில் ஏசுதாஸ், தாசன், ஜுடின் ஆகிய 3 பேரும் மீன் பிடிக்க புறப்பட்டனர். இவர்கள் 7 பேரும் கன்னியாகுமரி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக ஒரு கப்பல் சென்றது. கப்பலில் இருந்து 6 பேர் வெளிபகுதிக்கு வந்து மீனவர்களை நோட்டமிட்டனர். மேலும், அவர்கள் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குண்டுகள் படகிற்கு அருகே தண்ணீரில் பாய்ந்தன. இதனால், மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். மீனவர்களை நோக்கி சுட்ட பின்பு கப்பல் வேகமாக சென்று விட்டது. அது எந்த நாட்டுக் கப்பல் என்று தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் அச்சம் கொண்ட மீனவர்கள் உடனே கரைக்கு திரும்பி, இந்த தாக்குதல் குறித்து உறவினர்களுக்கும், தூத்தூர் மண்டல மீனவர் உரிமை மற்றும் பாதுகாப்பு குழுவுக்கும் தகவல் தெரிவித்தனர். மீனவர்கள் மீது தொடரும் தாக்குதலால் மீனவர்கள் இடையே பெரும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி உயிர்பலி வாங்கிய, வெளிநாட்டு கப்பல்களில் இருந்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும், திருவனந்தபுரம் லத்தீன் உயர் மறை மாவட்டம், கொல்லம் லத்தீன் கத்தோலிக்க மறைமாவட்டம், ஆலப்புழை லத்தீன் கத்தோலிக்க மறை மாவட்டம், கொச்சி லத்தீன் மறைமாவட்டம் ஆகிய 4 மறைமாவட்டங்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இன்று கொல்லம் நீண்டகரையில் சாலை மறியல் போராட்டமும், வருகிற 12-ந்தேதி திருவனந்தபுரம் சட்டபேரவை நோக்கி பேரணியும், 19-ந்தேதி கொச்சி துறைமுகத்தில் முற்றுகை போராட்டமும் நடக்கிறது. இதில், சுமார் 500 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications