33% இட ஒதுக்கீடு கேட்டு பெண்கள் போராட வேண்டும்: ஜெயந்தி நடராஜன்
சென்னை: சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க பெண்கள் போராட வேண்டும். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு தலைமை வகித்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேசியதாவது,
மகளிர் தினத்தையொட்டி நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் அழகு நிலையங்களில் மட்டும் பெண்களுக்கு 50 சதவீதம் சலுகை என்ற நிலை இருக்கக் கூடாது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 6.1 கோடி பெண்கள் வாக்களித்துள்ளனர். மொத்தமுள்ள 690 தொகுதிகளில் 55 தொகுதிகளில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். மணிப்பூரில் 3 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் கோவாவிலோ ஒரு பெண் கூட வெற்றி பெறவில்லை.
படித்தவர்கள் அதிகமுள்ள பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் கூட பெண்கள் குறைவான எண்ணிக்கையிலேயே வெற்றி பெற்றுள்ளனர். சட்டசபை மற்றும்நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடு ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. அதே போல மக்களவையிலும் நிறைவேற்ற வேண்டும். அதற்காக பெண்கள் போராட வேண்டும்.
வரும் 12ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பெண்கள் முன்னேற்றம் என்று மொத்தமாக நிதி ஒதுக்காமல் கல்வி, சுகாதாரம் என்று துறை ரீதியாக ஒதுக்க வேண்டும். இது குறித்து நான் நிதியமைச்சரிடம் வலியுறுத்துவேன்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடி கடன் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 8 குழுக்களுக்கு அவர் தலா ரூ.5 லட்சம் கடன் வழங்கினார்.












Click it and Unblock the Notifications