அகிலேஷ் யாதவுக்கு காங்கிரஸ், பாஜக வாழ்த்து!

தேர்தலில் வென்றவுடன் உத்திரபிரதேசத்தின் அடுத்த முதல்வராக முலாயம் சிங் யாதவ்தான் வருவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் பதவிப் போட்டியில் ஈடுபடாமல், தனது மகனுக்கு வழிவிட்டுள்ளார்.
இதன் மூலம் 403 எம்பிக்களைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உபியின் முதல் இளம் முதல்வர் என்ற சிறப்பு அகிலேஷுக்குக் கிடைத்துள்ளது.
அகிலேஷுக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிகின்றன. கட்சி பேதமின்றி அனைவரும் அகிலேஷை வாழ்த்தி வருகின்றனர்.
காங்கிரசின் செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி வெள்யிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உ.பி.யின் முதல்வராக பதவியேற்கும் அகிலேஷ் யாதவுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அகிலேஷுக்கு முதல்வராக பதவி ஏற்பதற்கான அதிகாரம் கிடைத்துள்ளது.
கட்சி சார்பாகவும், அகிலேஷ் யாதவ் சார்பாகவும் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிச்சயமாக அவர் நிறைவேற்றுவார் என எதிர்ப்பார்க்கிறேன். மேலும் கடந்த கால அனுபவங்கள் அவருக்கு பாடமாக இருக்கும்," என்று அவர் கூறியுள்ளார்.
உ.பி.யில் கடந்த முறை சமாஜ்வாடி ஆட்சியின்போது அதன் எதிர்ப்பாளர்கள், இந்த ஆட்சியை குண்டர்கள் ஆட்சி என கூறியிருந்தனர். அதனையே 'கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம்’ என ரஷீத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசின் சட்டமன்ற அவைத்தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், "அனுபவம் குறைவாக பெற்றிருக்கும் இளைய முதல்வர் அகிலேஷ், அவரது ஆதரவாளர்களின் ஆலோசனைகளை கேட்டு மாநிலத்தை மேம்படுத்துவார் என எதிர்பார்ப்பதாக," என்றார்.
இதேபோல், பா.ஜனதா செய்தி தொடர்பாளர் விஜய் பதக் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "முதல்வராக பதவி ஏற்க இருக்கும் அகிலேஷ் யாதவை பா.ஜனதா பாராட்டுகிறது. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புகிறோம். அகிலேஷ் சிறந்த முறையில் நிர்வாகம் செய்வார், ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள முற்படுவார்," என நம்புவதாகவும் கூறினார்.
பிற மாநில முதல்வர்கள் அனைவருமே அகிலேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் அகிலேஷுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications