பிரகாஷ் சிங் பாதல் பதவியேற்பு நிகழ்ச்சி: ஜெ. சார்பில் தம்பிதுரை மற்றும் மைத்ரேயன் பங்கேற்பு!
மதுரை: பஞ்சாப் மாநில முதல்வராக பிரகாஷ்சிங் பாதல் ஐந்தாவது முறையாக பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாதல் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் டாக்டர் மு.தம்பிதுரையும், டாக்டர் வா.மைத்ரேயனும் பங்கேற்க உள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதள் - பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணியின் சார்பில் அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் வரும் மார்ச் 14 -ந் தேதி முதல்வராக பதவி ஏற்பு உள்ளார்.
இந்த பதவி ஏற்க விழாவில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் அவர் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் சிரோன்மணி அகாலிதள் - பா.ஜ.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, பிரகாஷ் சிங் பாதல் அம் மாநில முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட பி்ரகாஷ் சிங் பாதல் வரும் 14 -ந் தேதி நடைபெற உள்ள தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டார்.
பிரகாஷ் சிங் பாதல் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் பெரிதும் விழைந்தாலும், 18 -ந் தேதி நடைபெற உள்ள சங்கரன்கோயில் இடைத்தேர்தலை முன்னிட்டு 14 - ந் தேதி முதல் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதனால், அ.தி.மு.க. சார்பில், டாக்டர் மு.தம்பிதுரை, எம்.பி., மற்றும் டாக்டர் வா.மைத்ரேயன், எம்.பி. ஆகியோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications