5 மாநில புதிய எம்.எல்.ஏக்களில் 35% கிரிமினல்கள்- 66% கோடீஸ்வரர்கள்!
டெல்லி: உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றோரில் கோடீஸ்வரர்களும் குற்றவாளிகளும் கணிசமான அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிரிமினல்கள்
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மொத்தம் 690 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 35 விழுக்காட்டினர் அதாவது 252 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் உத்தரப்பிரதேசத்துக்குத்தான் முதலிடம்!
கடந்த 2007- ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை ஒப்பிடும்போது இது 8 விழுக்காடு அதிகம்.
கோடீஸ்வரர்கள்
5 மாநிலங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டோரில் 66 விழுக்காடு அதாவது 457 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். இது கடந்த 2007-ம் ஆண்டு தேர்தலைவிட 32 விழுக்காடு அதிகம்,
2007-ம் ஆண்டு இதே 5 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டோரில் 27 விழுக்காட்டினர் குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் 34 விழுக்காட்டினர் ரூ1 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளோர்.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோரில் 47 விழுக்காட்டினர் அதாவது 189 எம்.எல்.ஏக்கள் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 2007-ம் ஆண்டு தேர்தல் முடிவின் போது இது 34 விழுக்காடு அதாவது 140 எம்.எல்.ஏக்கள் தங்கள் மீது கிரினம்ல் வழக்கு இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இதேபோல் 67 விழுக்காட்டினர் அதாவது 271 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். 2007-ல் 124 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருந்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் பிகாபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சமாஜ்வாதி கட்சியின் மித்ரா சென் மீது மட்டும் 36 கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ. நவாப் காமிம் அலி கானின் சொத்து மதிப்பு ரூ56.89 கோடி. பகுஜன் சமாஜ்கட்டியின் ஷா ஆலமின் சொத்து மதிப்பு ரூ54.44 கோடி
மணிப்பூர்
மணிப்பூர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் எவர் மீதும் எந்த ஒரு கிரிமினல் வழக்குமே பதிவாக இல்லை. அதே நேரத்தில் 2007-ல் ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே கோடீஸ்வரரராக இருந்த மணிப்பூரில் தற்போது 16 பேர் கோடீஸ்வரரகளாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
பஞ்சாப்
2007-ம் ஆண்டில் 21 எம்.எல்.ஏ.க்கள் குற்றப் பின்னணியுள்ளவர்களாக இருந்த பஞ்சாப் பேரவையில் தற்போது 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல் 117 பேர் கொண்ட பேரவையில் 101 எம்.எல்.ஏ.க்கள் அதாவது 86 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
கோவா
கோவாவைப் பொறுத்தவரையில் 40 பேர் கொண்ட பேரவையில் 37 பேர் அதாவது 93 விழுக்காடு எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரர்களாகவும் 30 விழுக்காடு அதாவது 12 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர்காண்ட்
உத்தர்காண்ட்டில் 32எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரரர்களாகவும் 19 பேர் மீது கிரிமினல் வழக்குகளும் பதிவாகி உள்ளன.












Click it and Unblock the Notifications