எங்களது கட்சியின் தோல்வி குறித்துக் கவலை இல்லை, தொண்டர்கள் தாங்கிக் கொள்வார்கள்-விஜயகாந்த்

சங்கரன்கோவிலில் நேற்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார் விஜயகாந்த். நேற்று மாலை வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அவர் பேசுகையில்,
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக மின்தடை விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா மக்களை ஏமாற்றுகிறார். வரும் 18-ம் தேதிக்கு பின்னர் மின் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன.
மத்திய அரசு 1000 மெகாவாட் மின்சாரத்தை தரவில்லை என்று இப்போது ஜெயலலிதா பழி போடுகிறார். உடன்குடியில் ரூ.8 ஆயிரம் கோடியில் மின் திட்டத்தையும் சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்காகவே அறிவித்துள்ளார்.
மின் தடையைப் போக்க கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மக்களை ஏமாற்றி நாட்டை இருட்டாக்கிவிட்டனர்.
மாணவர்கள் படிக்க மின்சாரம் கிடையாது. ஆனால், தேர்வெழுத ஜெனரேட்டர் என்று கூறுகிறார். மின்தடை காரணமாக தமிழகத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சட்டம்-ஒழுங்கு சரியில்லை.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் 32 அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் என்று ஒரு கூட்டமே பணியாற்றுகிறது. நான் தனி ஆளாக நின்று போட்டி போடுகிறேன். என்னை எதிர்கொள்ள 32 அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். இதனால் யாருக்கு இறங்குமுகம் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
சட்டப் பேரவையில் சபை நாகரிகத்தை மதித்து நடந்தேன். மக்கள் பிரச்னைக்காகதான் பேசினேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை சஸ்பெண்ட் செய்தார்கள். அதனால்தான் நான் நீதிமன்றம் சென்றிருக்கிறேன்.
பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என்று கட்டண உயர்வுகளை அறிவித்துவிட்டு தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க. எனவே, இத்தேர்தல் அ.தி.மு.க.வுக்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் சவால்; ஆணவத்துக்கும், அமைதிக்கும் இடையே நடக்கும் போர், மெளன யுத்தம்.
கடந்த 20 ஆண்டுகளாக இத்தொகுதி மக்களை அ.தி.மு.க. ஏமாற்றி வந்துள்ளது. லஞ்சம் இருந்தால்தான் பஞ்சம் இருக்கும். லஞ்சத்தை ஒழித்தால் பஞ்சமும் ஒழியும். ஊழலையும் லஞ்சத்தையும் நான் ஒழிப்பேன். கவர்ச்சித் திட்டங்களை நம்பாதீர்கள். வளர்ச்சித் திட்டங்களை நம்புங்கள்.
கடந்த ஆட்சியில் கொடுத்த இலவச டி.வி.க்கள் கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இப்போது கொடுக்கப்படும் இலவச மிக்ஸிகளை யாரும் வாங்குவதில்லை, காரணம் மின்சாரம் இல்லை.
தோல்வி குறித்து நான் கவலைப்படவில்லை. என் தொண்டர்கள் தைரியமானவர்கள். அவர்களால் நான் போராடுகிறேன். மக்களுக்கு நன்மை கிடைக்கும் வரை போராடுவேன் என்று அவர் பேசினார்.
நேற்று தொடங்கிய விஜயகாந்த்தின் பிரசாரம் 6 நாட்களுக்கு நீடிக்கிறது. அதேபோல அவரது மனைவி பிரேமலதாவும் இன்று முதல் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.












Click it and Unblock the Notifications