செரீனாவை ஞாபகமிருக்கிறதா?...நடராஜனை 'மாட்டி விட' அழைக்கிறதாம் போலீஸ்!

மதுரையைச் சேர்ந்தவர் இந்த செரீனா. இளம் பெண்ணான இவர் 2003ம் ஆண்டு செய்தித் தாள்களில் முதல் பக்க செய்தியாக ரொம்ப நாளைக்கு வலம் வந்தவர். காரணம், அரசியல் விளையாட்டில் சிக்கி பந்தாடப்பட்டதால்.
2003ம் ஆண்டு செரீனாவும், அவரது தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்து வந்தது. சசிகலா, நெருக்கமான நட்பு வட்டத்தில் இருந்தார்.
செரீனாவின் வீட்டில் கஞ்சா இருந்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்டது. மேலும் 10 கிலோ கஞ்சாவையும் கோர்ட்டில் காட்டினர். மேலும், சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ரூ. 1.04 கோடி பணத்தையும் பறிமுதல் செய்து அதிலும் செரீனாவை இணைத்து விட்டனர்.
ரொ்ம்ப நாளைக்கு ஏன் இந்தப் பெண் கைது செய்யப்பட்டார், இவரா கஞ்சா பதுக்கினார் என்றெல்லாம் மக்களுக்குப் பெரும் குழப்பம். ஆனால் அவருக்கு ஆதரவாக வாதாட டெல்லியிலிருந்து கபில் சிபல் வந்தபோதுதான் செரீனாவுக்குப் பின்புலம் மிகப் பெரிதாக இருப்பது தெரிய வந்து பெரும் பரபரப்பானது.
செரீனா, நடராஜனின் நட்பு வட்டத்தில் இருந்தவர் என்று அப்போது கூறப்பட்டது. இது நடராஜனின் மனைவி சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவரது விருப்பத்திற்கேற்ப அதிமுக ஆட்சியின் உத்தரவுக்கேற்பவே இந்த கைது நடவடிக்கை என்று அப்போது பரபரப்பு ஏற்பட்டது.
பெரும் போராட்டத்திற்குப் பின்னர் 2006ம் ஆண்டு இந்த வழக்குகளிலிருந்து விடுபட்டார் செரீனா. அதன் பிறகு அவர் என்ன ஆனால் என்ற தகவலே இல்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் செரீனாவை லைம்லைட்டுக்கு இழுக்க மதுரை காவல்துறையிலிருந்து நெருக்குதல் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன.
நடராஜனுக்கு மிக நெருக்கமாக இருந்த அவரை இப்போது நடராஜனுக்கு எதிராக திரும்புமாறு சிலர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், நடராஜனுக்கு எதிராக எதையாவது பேசுமாறும் அவர்கள் அழுத்தம் தருமாறும் கூறப்படுகிறது.
ஆனால் செரீனா இதற்கு உடன்பட மறுத்து வருகிறாராம். தனது படிப்பு ஏற்கனவே பாழாகிப் போய் விட்டது. கஷ்டப்பட்டு பிஎஸ்சி படித்தேன். அதிலும் நிறைய அரியர்ஸ் உள்ளது. அதை முடிப்பதுதான் எனது முக்கிய நோக்கம். எனவே தயவு செய்து மறுபடியும் என்னை வம்பில் இழுத்து விடாதீர்கள் என்று கெஞ்சி வருகிறாராம் செரீனா.
எந்த அளவுக்கு இது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நடராஜனுக்கு நேரம் சரியில்லாமல் இருப்பதால் எப்படியாவது செரீனாவை வைத்து நடராஜனுக்கு மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்த மதுரை வட்டார காவல்துறையிலிருந்து சிலர் தொடர்ந்து செரீனாவை அணத்திக் கொண்டிருப்பதாக பரபரப்பாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications