முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு

கேரள சட்டசபையில் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில நிதியமைச்சர் கே.எம். மணி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1,300 மீட்டர் கீழே புதிய அணை கட்டப்படும் என்றும், அதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மணி தெரிவித்தார்.
கேரளாவின் 5 மாநிலங்களில் வசிக்கும் 5 லட்சம் பேரின் உயிருக்கு அச்சுறுத்துல் இருப்பதால் அணையின் பாதுகாப்பு மிகவும் அவரசமானதும், முக்கியமானதும் ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரளா உறுதியாக உள்ளது. ஆனால் அணை வலுவாக உள்ளது என்றும், அதனால் புதிய அணை கட்டக் கூடாது என்றும் தமிழகம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தான் புதிய அணை கட்ட கேரள அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
ஏப்ரலில் ஐவர் குழு அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட ஐவர் குழு வரும் ஏப்ரல் மாத இறுதியில் அறிக்கை சமர்பிக்கவிருக்கிறது.
ஐவர் குழுவின் கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர் வள ஆணைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரளாவின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், மத்திய அரசின் தொழில்நுட்ப நிபுணர்கள் 2 பேர் கலந்து கொண்டனர். அணையின் ஆய்வறிக்கை குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு கே.டி.தாமஸ் கூறுகையில், வரும் ஏப்ரல் மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் ஐவர் குழு மீண்டும் கூடும். அதையடுத்து ஏப்ரல் மாத இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் எங்கள் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்வோம் என்றார்.
அணையைச் சுற்றியுள்ள மண்வளத்தை பரிசோதித்து வரும் நிபுணர் குழு தனது அறிக்கையை நேற்று ஐவர் குழுவிடம் அளிப்பதாக இருந்தது. ஆனால் ஆய்வு முடிவுகளைக் கண்டறிவதில் ஏற்பட்ட தாமதத்தால் நிபுணர் குழு அறிக்கையை அளிக்கவி்ல்லை. ஐவர் குழு தனது அறிக்கையை ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications