சென்ட்ரலில் தலையில்லா உடல்: டெல்லி விரையும் சென்னை போலீஸ்
சென்னை: சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் தலையில்லா ஆணின் உடல் இருந்தது குறித்து விசாரணை நடத்த சென்னை போலீசார் டெல்லி செல்கிறார்கள்.
டெல்லியில் இருந்து புறப்பட்ட கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. கடந்த 17ம் தேதி காலை 7.15 மணியளவில் ரயிலை சுத்தம் செய்ய சென்ற பணியாளர்கள் 2.5 x 2.5 x 5 அடி இரும்பு பெட்டி கிடந்ததைப் பார்த்தனர். உடனே அவர்கள் இது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சென்ட்ரல் ரயில்வே நிலைய போலீசார் அங்கு வந்து பெட்டியைத் திறந்து பார்த்தனர். அப்போது அதில் கருப்பு நிற பாலிதின் பையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் தலையில்லா உடல் இருந்தது.
இதே போன்று தெற்கு டெல்லியின் சாராய் ரோஹில்லாவில் உள்ள இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு பையில் தலையில்லா பெண்ணின் உடல் இருந்தது. ஒரே நாளில் டெல்லி மற்றும் சென்னை ரயில் நிலையங்களில் தலையில்லா ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை அவர்கள் காதல் ஜோடிகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னைக்கு வந்த ரயிலில் இருந்த தலையில்லா உடல் குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு படையினர் டெல்லி செல்கிறார்கள். டெல்லி ரயில் நிலையத்தில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகளை சோதித்துப் பார்க்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இன்னொரு தனிப்படை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எந்தெந்த ஊர் ரயில் நிலையங்களில் எல்லாம் நின்று வந்ததோ அங்கெல்லாம சென்று விசாரணை நடத்தவிருக்கிறார்கள். மற்றொரு படையினர் சென்னையில் விசாரணை நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications