அப்பாவைத் தொடர்ந்து எம்.எல்.ஏவான மகள் முத்துச்செல்வி

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார். இந்த வெற்றியின் மூலம் சங்கரன்கோவில் அதிமுகவின் கோட்டை என்பது நிரூபணமாகியுள்ளது. கடந்த 1984ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானவர் முத்துசெல்வியின் தந்தை சங்கரலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தந்தை வழியில் மகளும் எம்.எல்.ஏ.வாகியுள்ளார். அதுமட்டுமின்றி சங்கரன்கோவில் தொகுதியின் முதல் பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதற்கு காரணம் சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனையின்போது முதல்வர் ஜெயலலிதா தேமுதிக தலைவர் விஜயகாந்தை பார்த்து திராணி இருந்தால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு காட்டுங்கள் என்றது தான். இதையடுத்து விஜயகாந்தும் வரிந்து கட்டிக் கொண்டு திராணியை நிரூபிக்க சங்கரன்கோவிலில் தீவிர பிரச்சாரம் செய்தார்.
இடைத்தேர்தல் என்பதைவிட திராணி தேர்தல் என்று அழைக்கப்பட்ட இதில் அதிமுக அமோக வெற்றி பெற்றதன் மூலம் ஜெயலலிதா தனது திராணியை நிரூபித்துவிட்டார். ஆக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் முத்துசெல்வி.
கடந்த 1980ம் ஆண்டில் இருந்து இன்றுவரை சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்று வருகின்றனர். இந்த தொகுதியில் அதிமுக தொடர்ந்து 8வது முறையாக வெற்றி பெற்று 5வது முறையாக தொகுதியை தனது வசப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications