இலங்கை தீர்மானம்: எஸ்.எம்.கிருஷ்ணா மீது கருணாநிதி கடும் தாக்கு

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டாமென்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், அதற்கு இந்திய அரசு இந்த பிரச்சனையில் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாகவும் செய்தி வந்துள்ளதே?
பதில்: எஸ்.எம்.கிருஷ்ணா எனக்கு நல்ல நண்பர் என்ற போதிலும், எப்போதும் நிலைமைகளை உணர்ந்து பதில் சொல்லக் கூடியவரல்ல. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனை வந்த போதும் கிருஷ்ணா தான் இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அண்டை நாடான இலங்கைப் பிரச்சனையிலே, அந்த நாட்டிற்கு எதிராக ஒரு நிலை எடுப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்ற பொருள்பட மாநிலங்களவையில் கூறிய காரணத்தால் மாநிலங்களவை கழக உறுப்பினர்கள் திருச்சி சிவாவும், கனிமொழியும் குறுக்கிட்டு, தென்னாப்பிரிக்கா, பங்காளதேஷ், போன்ற அண்டை நாட்டுப் பிரச்சனைகளிலேயே இந்தியா எடுத்த நிலை என்ன என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதில் அளிக்கவில்லை. அதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது பற்றி தீவிரமாக எதிர்த்ததின் அடிப்படையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் விவரங்கள் முழுமையாக தனக்கு கிடைக்கா விட்டாலும், இலங்கைத் தமிழர்கள் சமமாகவும், சுயமரியாதையுடனும் மதிப்புடனும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக அந்த தீர்மானத்தை ஆதரிக்கவே இந்தியா விரும்புகிறது என்று பதில் அளித்து, அதனை தமிழகத்தைத் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றார்கள் என்று ஏற்கனவே செய்தி வந்துள்ளது.
இதற்கு பிறகும் எஸ்.எம்.கிருஷ்ணா போன்றவர்கள் இன்னும் இந்தியா ஐ.நா.தீர்மானம் குறித்து இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று சொல்வது பிரச்சினையை திசை திருப்பும் முயற்சியாக உள்ளது.
இருந்தாலும், மத்திய அமைச்சரவையில் தமிழ் உணர்வுள்ள அமைச்சர்களான ஜி.கே.வாசன், நாராயணசாமி போன்றவர்கள் இந்த பிரச்சனையில் தொடர்ந்து உறுதியாக இருப்பதும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூறி வருவதும் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
எனவே பிரதமர் நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியில் இருந்து பின்வாங்க மாட்டார் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications