நற்குணங்களின் உறைவிடம், கருணையின் திருவுருவம் ஜெயலலிதா: ஓ.பி. பாராட்டு மழை

தமிழக பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மதியம் 12.56 மணி வரை தொடர்ந்து 2 மணிநேரம் 56 நிமிடங்கள் நின்று கொண்டே வாசித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு என்ற குறளில் நல்வேந்தர்களின் நற்குணங்கள் என்று கூறப்பட்டுள்ள அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய குணங்களின் உறைவிடமாகவும், அளவற்ற கருணையின் திருவுருவாகவும் திகழும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆசியுடன் தமிழக அரசின் 2012-2013ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டங்களை இந்த பேரவை முன் வைக்க விழைகிறேன். இது இந்த அரசின் இரண்டாவது நிதிநிலையறிக்கை ஆகும். இதில் என்போன்ற எளியவனுக்கும் இத்தகைய பெரிய வாய்ப்பை வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன்பட்டவன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றும், என்றும் நமது மாநிலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் நமது முதல்வர் மட்டுமே என்பதை உணர்ந்துள்ள தமிழக மக்கள் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை வழங்கி அந்த நம்பிக்கையை உறுதிபடுத்தியுள்ளனர்.
ஆட்சிப் பொறுப்பேற்ற 10 மாதத்திற்குள் வீழ்ச்சியடைந்திருந்த மாநிலத்தை முதல்வர் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களே தமிழக மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை பொய்க்காது என்பதற்கு சான்றாகும். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும், மக்களுடைய எதிர்பார்ப்புகளையும் தடைகளை மீறி நிறைவேற்றும் கடமை எங்களுக்குள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது தமிழகம் எண்ணற்ற பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருந்தது. நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மாநிலத்தின் வளர்ச்சி பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையை மாற்றி, நிதிநிலையை சீர்படுத்தி, மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக இந்த அரசு விளங்க முதல்வர் ஜெயலலிதா அயராது உழைக்கிறார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
வளம் மிக்க மாநிலமாக; கண்ணியமான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் எல்லோருக்கும் வழங்கும் மாநிலமாக; வறுமையும், ஏழ்மையும் ஒழிக்கப்பட்ட மாநிலமாக; வேலைவாய்ப்பற்ற இளைஞர்களே இல்லாத மாநிலமாக; ஒடுக்கப்பட்டோர் உள்ளிட்ட அனைவரின் வாழ்வுரிமையை அனைத்து வகைகளிலும் உறுதி செய்யும் மாநிலமாக; அனைவரின் கண்ணீரையும் துடைத்தெறியக்கூடிய மாநிலமாக நமது மாநிலத்தை உருவாக்கிட வேண்டும் என்பதுதான் நமது முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பேராவல் என்றார்.
பன்னீர்செல்வம் தனது தொகுதியான போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி துவங்க நிதி ஒதுக்குவது குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அப்போது அவர் முதல்வரைப் பார்த்து புன்முறுவலுடன் வணக்கம் தெரிவித்தார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான முத்துசெல்வி முதன்முதலாக கூட்டத் தொடரில் கலந்து கொண்டார். ஜெயலலிதா சட்டசபைக்குள் நுழைந்தவுடன் அவரிடம் வாழ்த்துப் பெற்றார். முத்துசெல்வி முதல்வர் அமரும் வரிசையில் இருந்து 5வது வரிசையில் அமர்ந்துள்ளார்.
சென்னை மேயர் சைதை துரைசாமி, அதிமுக நிர்வாகி சுலேச்சனா சம்பத், மதுரை மாநகர மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பார்வையாளர் மாடத்தில் இருந்து பேரவை நிகழ்வுகளைப் பார்வையிட்டனர். பட்ஜெட் தாக்கல் செய்து முடித்தவுடன் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications