தமிழகத்தில் அரசு வேலைக்காக பெயர்களை பதிவு செய்த ஆந்திர மக்களை எதிர்த்து ஐகோர்டில் மனு தாக்கல்
சென்னை: ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.நாகராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது
நான் தெலுங்கு மொழி வாயிலாகப் படித்து கணிதத்தில் இளநிலைப் பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றுள்ளேன். 2002ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன்.
ஆந்திர மாநிலத்தில் ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்வதற்கான வயது உச்ச வரம்பு 35 ஆக உள்ளது. அங்கு 35 வயது வரை வேலை கிடைக்காதவர்கள், போலி ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் வசிப்பதாக ரேஷன் அட்டை, இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பெறுகின்றனர்.
அதன்பிறகு அதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள தங்களின் வேலை வாய்ப்பு பதிவை, சென்னை, திருவள்ளூர், வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு மாற்றிக் கொள்கின்றனர்.
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் சிறுபான்மை தெலுங்கு மொழிப் பள்ளிகளில் காலியாக உள்ள 140 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி மாதம் 286 பேர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். அதில் 150 பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
எனவே ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, இது குறித்து தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications