ஓரினச்சேர்க்கை குற்றமா? இல்லையா? உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நிறுத்திவைப்பு

ஓரினச்சேர்க்கை வழக்கு
ஓரினச் சேர்க்கைக்கு எதிரான அமைப்புகளின் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து சமூக அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் எஸ்.ஜே.முகோபாத்யாய ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு பிப்ரவரி 15-ந் தேதி முதல் இம்மனுக்கள் மீதான விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு முரண்
வழக்கு விசாரணையின் போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மற்ற நாடுகளின் கலாசாரத்தில் இருந்து, இந்திய கலாசாரம் வேறுபட்டது. சில நாடுகளில் ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கின்றனர் என்பதற்காக, நாமும் அதை அங்கீகரிக்க முடியாது. ஓரினச் சேர்க்கை ஒழுக்கக் கேடானது; இயற்கைக்கு எதிரானது. இந்திய சமூகம், ஓரினச் சேர்க்கையை ஏற்கவில்லை. எனவே, சமூகம் அங்கீகரிக்காத விஷயத்தை, சட்டமாக்க முடியாது' எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் "ஓரின சேர்க்கையால் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.
மத்திய அரசின் இரு துறைகளுக்கிடையே நிலவும் இந்த முரண்பட்ட கருத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, "ஓரின சேர்க்கை குற்றமல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறோம். டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை. எனவே, இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்யப் போவதில்லை,'' என்றார்.
இந்நிலையில் இந்த வழக்கின் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications