சென்னை வாலிபரை கடத்தி சென்று கழுத்தறுத்து கொலை- ரவுடி உட்பட 4 பேர் கைது
சென்னை: சென்னை ஆர்.கே.நகரில் காணாமல் போனவர் என்று கருதப்பட்ட வாலிபரை ஆட்டோவில் கடத்தி சென்று கழுத்து அறுத்து கொலை செய்த ரவுடி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆர்.கே.நகரை அடுத்த ஜெ.ஜெ.நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் அய்யனார்(21). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 24ம் தேதி முதல் காணாமல் போனதாக ஆர்.கே.நகர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை ஓட்டிய பகுதியில் உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் பெரம்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று, பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தார்.
இதனிடையே ஆர்.கே.நகரில் காணாமல் போன அய்யனாரும், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த நபரும் ஒரே நபர் தான் என்று கொடுங்கையூர் பகுதி உளவுப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யவேல் நடத்திய ரகசிய விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த 24ம் தேதி ஆர்.கே.நகரில் உள்ள அய்யனாரின் வீட்டருகே நடைபெற்ற சாவு ஊர்வலத்தில் அய்யனார் நடனம் ஆடினார். அப்போது அதேப் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற ரவுடிக்கும், அய்யனாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதன்பிறகு ரவுடி கார்த்திக் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து அய்யனாருக்கு மது வாங்கிக் கொடுத்து ஆட்டோவி்ல் கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பிணத்தை பேசின் பிரிட்ஜ் ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு தப்பியோடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து அய்யனாரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய ரவுடி கார்த்திக், அவரது கூட்டாளிகள் நெப்போலியன், ஓலை பாஸ்கர், நாகூர் மீரான் ஆகியோரை போலீசார் கைது செய்து செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி கார்த்திக் மீது 17 வழக்குகள் உள்ளன.
இவ்வழக்கில் கொலையாளிகளை பிடிக்க உதவிய உளவுப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நித்யவேலை, போலீஸ் கமிஷனர் திரிபாதி, உளவுப்பிரிவு இணை கமிஷனர் நல்லசிவம் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.












Click it and Unblock the Notifications