காவிரிப் பிரச்சனை- லோக்சபாவில் தமிழக, கர்நாடக எம்.பிக்கள் கடும் மோதல்

இன்று காலை நாடாளுமன்றம் கூடியவுடன் இரு அவைகளிலும் சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் துவக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம், ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரி அதிமுகவினர் அமளியில் குதித்தனர். இதனால் இரு அவைகளும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியது.
அவை கூடியதும் காவிரிப் பிரச்சனையை கர்நாடக எம்.பிக்கள் கிளப்பினர். கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. அனந்தக்குமார் எழுந்து, காவிரியில் தமிழகம் தேவைக்கு அதிகமாக தண்ணீர் கேட்பதாக கூறி பேசினார். இதற்கு தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். பதிலுக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து இரு மாநில எம்.பிக்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவையில் பெரும் அமளி நிலவியது. அலுவல் எதையும் தொடர முடியவில்லை. இதையடுத்து அவையை இன்று நாள் முழுவதும் ஒத்திவைத்து உத்தரவிட்டார் சபாநாயகர் மீரா குமார்.












Click it and Unblock the Notifications