அமைச்சர் அலுவலகத்தில் மேய்ந்த ஆடுகள் மாயம்- அடித்து சாப்பிட்டு விட்டதாக புகார்
மதுரை: தமிழக அமைச்சர் சுந்தரராஜன் அலுவலக வளாகத்தில் மேயச் சென்ற ஆடுகளை, அமைச்சரின் உதவியாளர் உட்பட சிலர் பிடித்து கறி சமைத்து சாப்பிட்டதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி தாலுக்கா கோகுலயாதவர் சங்க தலைவர் இளம்பரிதி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது
எங்கள் சங்க உறுப்பினர் ஒருவர், பரமக்குடி எம்.எல்.ஏ.அலுவலகம் அருகே கறிக்கடை நடத்தி வருகிறார். கடை அருகே ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அதில் ஒரு ஆடு, எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் புகுந்து மேய்ந்தது. அப்போது அங்குள்ள அமைச்சரின் உதவியாளர் சிவானந்தம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆட்டைப் பிடித்து வெட்டி, கறி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதுபோல் எம்எல்ஏ அலுவலகத்திற்குள் சென்று இதுவரை 26 ஆடுகள் மாயமாகிவிட்டன. பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
அமைச்சரின் உதவியாளர் சிவானந்தம் மற்றும் இக்குற்றத்தில் ஈடுபட்ட சிலர் மீது பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் சிவானந்தத்திடம் போலீசார் பொய்யான புகாரை பெற்று எங்கள் சங்க உறுப்பினர் கண்ணன், பாலமுருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் அமைச்சர் உத்தரவின் பேரில் தான் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எங்களது சங்க உறுப்பினர்களை பாதுகாக்க உண்ணாவிரதம் இருக்க, போலீசாரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே மார்ச் 30ம் தேதி உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இம்மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர், தற்போது உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளதால் மனுவை வாபஸ் பெறுவவதாக கூறினார். இதனால் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications