'சூப்பர் ஐஏஎஸ் அதிகாரி' ராதாகிருஷ்ணன் வசம் திட்ட அமலாக்கத்துறை

இதற்கான அறிவிப்பை மாநில தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி நேற்று வெளியிட்டார்.
டாக்டர் ராதாகிருஷ்ணனை தமிழக மக்கள் குறிப்பாக, நாகை, தஞ்சை, சேலம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அந்த மாவட்டங்களில் தனது திறமையான, மென்மையான, நேர்மையான அணுகுமுறைகளால் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருப்பவர் ராதாகிருஷ்ணன்.
இவர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சேலம் மாவட்டம் சந்தித்த நன்மைகள் அந்த மக்களால் இன்று வரை பேசப்படுகிறது. சேலம் மாவட்டத்தின் முகத்தை மாற்றியமைத்தவர் ராதாகிருஷ்ண். இவரே நிரந்தரமாக எங்களுக்கு கலெக்டராக இருக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் கூறினர்.
அதேபோல தஞ்சை மாவட்டத்தில் இவர் ஆட்சியராக இருந்தபோதுதான் கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் பெரும் தீவிபத்துத் துயரம் ஏற்பட்டு 90 சிறார்கள் கருகிப் பலியாயினர். அப்போது இவர் படு துரிதமாக செயல்பட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது. அப்போது இவருடன் இவரது மனைவி கிருத்திகா ராதாகிருஷ்ணனும் இணைந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தும், கவுன்சிலிங் செய்தும் நேரத்தை செலவிட்டு அனைவரையும் வியக்க வைத்தார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியராக ராதாகிருஷ்ணன் இருந்த சமயத்தில்தான் தமிழகத்தை சுனாமி தாக்கியது. அப்போது நாகை மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த வீரசண்முகமணி திறமையாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நாகைக்கு மாற்றப்பட்டார் ராதாகிருஷ்ணன். பின்னர் அங்கு சுனாமி வேகத்தில் இவர் செயல்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைப்பதற்கும், தேடுதல் வேட்டையை முடுக்கி விடுவதற்கும் கடுமையாக உழைத்தார். இவரது திறமையான செயல்பாடுகள் அப்போது அனைவராலும் பாராட்டப்பட்டது.
இவரது சேவையை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மிகச் சரியாக பயன்படுத்தி மக்களுக்கு ராதாகிருஷ்ணனின் நிர்வாகத் திறமை பயன்பட உதவினார்.
2000 முதல் 2001 வரை சென்னை மாநகராட்சி ஆணையராகவும் செயல்பட்டார். பின்னர் நிதித்துறையிலும், கல்வித்துறையிலும் துணைச் செயலாளர், இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர், சிறப்புச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
2009ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் இயற்கைப் பேரிடர் நிர்வாகப் பிரிவின் இந்தியப் பிரிவு உதவி இயக்குநராகவும், தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
தற்போது மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்புகிறார் ராதாகிருஷ்ணன். முதல்வர் ஜெயலலிதாவால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திட்ட அமலாக்கத்துறையின் செயலாளராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்கிறார்.
இந்தத் துறை மூலம்தான் அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச திட்டங்களையும், இன்ன பிற முக்கியத் திட்டங்களையும் அமல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முக்கியத் துறையின் செயல்பாடுகளை திறமை வாய்ந்த ராதாகிருஷ்ணன் வசம் முதல்வர் ஜெயலலிதா ஒப்படைத்திருப்பதால் இந்தத் துறைக்கே புதிய கவன ஈர்ப்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications