மயிலையில் பங்குனித் திருவிழா: கபாலீஸ்வரர் ரத உற்சவம்
சென்னை மயிலாப்பூரில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ( மார்ச் / ஏப்ரல்) பங்குனி உத்திரத்தை ஒட்டி பத்துநாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருத்தேரோட்டம்
பங்குனி பெருவிழாவை ஒட்டி கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் உற்சவ மூர்த்திகள் தினசரி காலையிலும், மாலையிலும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றனர்.
விழாவின் முக்கிய அம்சமான திருத்தேரோட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. முதலாவதாக விநாயகர் தேர் புறப்பட்டது. அதன்பின்னர் காலை 7.30 மணிக்கு திருத்தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனையடுத்து கற்பகாம்பாள் தேர், முருகப்பெருமான் தேர் என நான்கு தேர்களும் மாட வீதிகளில் வலம் வந்ததை கூடியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
63 நாயன்மார்கள் ஊர்வலம்
ஏப்ரல் 4ம் தேதி புதன்கிழமை பங்குனிப் பெருவிழாவின் சிறப்பு வாய்ந்த 63 நாயன்மார்கள் ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் சிவபெருமான் வெள்ளிச் சப்பரத்தில் ஏறி 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.













Click it and Unblock the Notifications