தங்கக் காசு கொள்ளைச் சம்பவத்தில் திருப்பம்... முத்தூட்ஊழியரே திருடி விட்டு டிராமா!
சென்னை: சென்னையிலிருந்து தங்கக் காசுகளுடன் கோவை கிளம்பிய முத்தூட் நிதி நிறுவன ஊழியர்களைத் தாக்கி அடித்து விட்டு அவர்கள் வைத்திருந்த 2.5 கிலோ தங்கக் காசுகளுடன் ஒரு கும்பல் தப்பிச் சென்ற விவகாரத்தில் இநத்ப் புகாரை கொடுத்த நபரே காசுகளை கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து இரு ஊழியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
முத்தூட் நிதி நிறுவனம் தங்கக் காசு விற்பனை திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. சூளைமேட்டில் உள்ள முத்தூட் நிறுவனத்தில் தங்கக் காசுகளை விநியோகிக்கிறார்கள். இங்கிருந்து தமிழகத்தின் பிற கிளைகளுக்குத் தேவையான தங்கக் காசுகள் வாங்கிச் செல்லப்பட்டு வருகின்றன.
இதேபோல, கோவை முத்தூட் பைனான்ஸ் நிதிநிறுவன விற்பனை நிர்வாகி செந்தில்குமார் (30), பொள்ளாச்சி முத்தூட் பைனான்ஸ் கிளை ஊழியர் ராமநாதன் (46) ஆகியோர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.
எழும்பூரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர். பின்னர் சூளைமேடு போன அவர்கள் அங்கு ஏழரை கிலோ தங்கக் காசுகளை வாங்கினர். பைகளில் போட்டுக் கட்டி எடுத்துக் கொண்டு கோவைக்கு கிளம்பினர்.
இரவு 10 மணியளவில் ஆம்னி பஸ்ஸில் ஏறுவதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் சென்றனர். ஆட்டோ கோயம்பேட்டை நெருங்கிய சமயத்தில் வழியில் ஒரு நபர் கை காட்டி ஆட்டோ நிறுத்தி ஏறிக் கொண்டார். அவர் ஆட்டோ டிரைவருக்கு அருகில் அமர்ந்து வந்தார்.
அதன் பிறகு நடந்தது குறித்து செந்தில்குமார் போலீஸில் கொடுத்த புகாரில்,
கோயம்பேடு மேம்பாலத்தைத் தாண்டி ஆட்டோ போனது. அப்போது பின்னால் வந்த ஒரு ஆட்டோ, திடீரென நாங்கள் இருந்த ஆட்டோவின் பின்பகுதியில் இடித்தது. இதையடுத்து ஆட்டோவை நிறுத்திய டிரைவரும், அவருடன் அமர்ந்திருந்த நபரும் கீழே இறங்கிப் பின்னால் போய் பார்த்தனர். அப்போது திடீரென டிரைவருக்கு அருகில் இருந்த நபர் கத்தியை எடுத்து என்னையும் ராமநாதனையும் மிரட்டி கப்சிப்பென்று இருக்குமாறு மிரட்டினான். பின்னர் தனது கையில் மிளகாய்ப் பொடியை எடுத்து என் முகத்தில் தூவினான். இதனால் நான் அலறினார். ராமநாதனும் உதவி கோரி கூச்சலிட ஆரம்பித்தார்.
இதையடுத்து நான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கழுத்திலிருந்து அவர்கள் பறித்தனர். பின்னர் செல்போனையும் பறித்தனர். அப்போது உஷாரான ராமநாதன் தான் வைத்திருந்த தங்கக் காசுகள் அடங்கிய இரு பைகளை எடுத்துக் கொண்டு (என்னிடம் ஒரு பை இருந்தது) ஆட்டோவிலிருந்து குதித்து தப்பி ஓடினார். இருளாக இருந்ததால் படு வேகமாக ஓடிய அவரைப் பிடிக்க முடியாமல் திருடர்கள் நின்று விட்டனர்.
இந்த நிலையில், என் கையில் கத்தியால் குத்தி சங்கிலி, செல்போனை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். அவர்கள் போனபோது ஆட்டோவில் இருந்த தங்கக் காசு பையும் கூடவே போய் விட்டது என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஆட்டோ டிரைவருக்கு 30 வயது இருக்கும். இடையில் ஏறிய அவரது நண்பருக்கு 40 வயது இருக்கும். எனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைத்தான் அவர்கள் குறி வைத்திருப்பார்கள் என கருதுகிறேன். முதலில் எனது சங்கிலியையும், செல்போனையும்தான் பறித்தனர்.
அதேபோல அவர்கள் தங்கக் காசுகள் இருந்த பையையும் பறிக்கவில்லை. நான்தான் சீட்டுக்குப் பின்புறம் வைத்திருந்தேன். எனது செல்போன், தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அவர்கள் ஆட்டோவில் தப்பியபோது கூடவே தங்கக் காசுகள் இருந்த பையும் போய் விட்டது என்றார்.
தேனியைச் சேர்ந்தவரான செந்தில்குமார் கடந்த 4 வருடமாக முத்தூட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாராம். இதுபோல அடிக்கடி சென்னைக்கு வந்து தங்கக் காசுகளை வாங்கிச் செல்வாராம். கடந்த மாதம் கூட இதுபோல வந்து 5 கிலோ தங்கக் காசுகளை இதேபோலத்தான் கொண்டு சென்றுள்ளாராம்.
இவர் கூறிய புகார் குறித்துப் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்படவே செந்தில்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் முத்தூட் நிறுவன உரிமையாளர்களும் கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்டனர். இதன் இறுதியில் செந்தில்குமாரும், ராமநாதனும் சேர்ந்துதான் டிராமா போட்டு தங்கக் காசுகளைத் திருடியிருப்பது தெரிய வந்தது.
ஆள் வைத்து இந்த நாடகத்தை இருவரும் அரங்கேற்றியுள்ளனர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டரை கிலோ தங்கக் காசுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மற்றவற்றையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications