வாக்களித்த 4வது நாளே சங்கரன்கோவில்- சென்னை இடையே சொகுசு பேருந்துவிட்ட ஜெயலலிதா

கடந்த 4ம் தேதி சட்டசபையில் பேசிய சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. முத்துசெல்வி சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து விடப்படுமா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார். ஆனால் அப்போது எழுந்த முதல்வர் முத்துசெல்வியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், விரைவில் பேருந்து விடப்படும் என்றும் தெரிவித்தார்.
அவர் அவ்வாறு அறிவித்த 4வது நாளே சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடி சொகுசு விரைவு பேருந்து(அல்ட்ரா டீலக்ஸ்) விடப்பட்டுள்ளது. இந்த பேருந்து தொடக்க விழா நேற்று சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நடந்தது. அதில் கோட்டாட்சியர் இளங்கோ, போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் மோகன், நகராட்சித் தலைவர் (பொறுப்பு) கே. கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
இதையடுத்து கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன், முத்துசெல்வி எம்.எல்.ஏ. ஆகியோர் சங்கரன்கோவில்- சென்னை சொகுசு பேருந்தை கொடியசைத்து தொடக்கி வைத்தனர். இந்த பேருந்து தினமும் மாலை 6.30 மணிக்கு சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்டு ராஜபாளையம், மதுரை, திருச்சி, விழுப்புரம், திண்டிவனம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு சென்னை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் தினமும் இரவு 7 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு சங்கரன்கோவில் வந்தடையும். இந்த பேருந்தில் பயணம் செய்ய பயணிகளிடம் ரூ.405 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications