பிறந்து 2 நாளேயான பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை கைது
போபால்: மத்திய பிரதேசத்தில் பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள முராரைச் சேர்ந்தவர் நரேந்திர ராணா(40). அவரது மனைவி அனிதா. அவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி முராரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நினைத்திருந்த ராணாவுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் குழந்தை பிறந்து 2 நாட்கள் ஆன பிறகு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குழந்தைக்கு நிகோட்டின் என்னும் விஷத்தைக் கொடுத்தார். இதில் குழந்தை பரிதாபமாக பலியானது. குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை கடந்த மாதம் தான் போலீசாருக்கு கிடைத்தது. அறிக்கையில் குழந்தைக்கு நிகோட்டின் என்னும் விஷம் கொடுக்கப்பட்டதால் அது இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே குழந்தை இறந்த அன்று அது வைக்கப்பட்டிருந்த வார்டில் ராணாவைப் பார்த்துள்ளனர். இதையடுத்து போலீசார் நேற்று ராணைவை கைது செய்து விசாரித்தபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
ஆண் குழந்தை வேண்டும் என்று நினைத்த ராணா பெண் குழந்தை பிறந்ததால் வருத்தத்தில் இருந்ததாக அவர் மனைவி அனிதா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications