16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா-2வது பசுமை புரட்சிக்காக.. ஜெ அறிவிப்பு

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
குறைந்தவாடகை இயந்திரங்கள்
வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்காக ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கும் மானியமாக 20 லட்சம் ரூபாய் வீதம் 400 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 80 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் வேளாண் இயந்திரங்கள் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம், விவசாயிகள், குறைந்த வேலையாட்களைக் கொண்டு, இயந்திரங்கள் மூலம் அதிக சிரமமின்றி விவசாயப் பணிகளை விரைவாக செய்ய இயலும். மேலும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதனால் குறைந்த நிலப்பரப்பில் அதிக அளவு உணவு உற்பத்தி கிடைக்க வழிவகுக்கும்.
2-வது பசுமைபுரட்சி
இரண்டாம் பசுமை புரட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, வேளாண் விஞ்ஞானிகள் உருவாக்கும் புதுப்புது ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்று அடைவதில் ஏற்படும் காலதாமதத்தை களையும் வண்ணம், பல்வேறு விவசாய உத்திகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை சார் பயிர் மேலாண்மை மென்பொருளை வேளாண்மைத் துறை வடிவமைத்துள்ளது.
உழவர் பெருவிழா முகாம்
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்களை விவசாய பெருமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், உழவர் பெருவிழா எனும் விழிப்புணர்வு முகாம்களை கிராம அளவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு முகாம்கள், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல், விதைச்சான்று, கால்நடைப் பராமரிப்புத் துறை, மீன்வளம் மற்றும் பால் வளம் போன்ற துறை அலுவலர்கள்; தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களைச் சார்ந்த விஞ்ஞானிகள்; தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அந்தந்த பகுதிகளைச் சார்ந்த சேவை வங்கியின் பிரதிநிதிகள் மூலம் “நடமாடும் விரிவாக்க மையம்" என்ற அணுகுமுறை மூலம் நடத்தப்படும்.
குறிப்பிட்ட கிராமச் சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட லாபகரமான பயிர் ரகம், தொழில்நுட்பங்கள், கால்நடை வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, மீன்வளம் முதலான இனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணைய முறையினைப் பின்பற்றி, பண்ணை உற்பத்தித் திறனை உயர்த்தும் வகையில் தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துரைப்பதற்காக இவ்வலுவலர்கள் இதர இடுபொருட்கள் விநியோகிப்பாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் சென்று, ஒரு நாள் முழுவதும் விவசாயிகளுடன் கலந்துரையாடுவார்கள். அந்தந்த கிராமங்களில் ஏற்படும் பண்ணை அளவிலான களப் பிரச்சனைகளுக்கு இந்த முகாம்களில் தீர்வு காணப்படும்.
முகாம்களில் கலைநிகழ்ச்சிகள்
தெருக்கூத்துகள், நாடகங்கள், கிராமிய பாடல்கள் மற்றும் நடனம் மூலமாக விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், தகவல்கள் இந்த முகாம்களில் அளிக்கப்படும். மேலும், பல்வேறு செயல் விளக்கங்கள், சிறு கண்காட்சிகள், வல்லுநர்கள் மற்றும் இடுபொருட்கள் விநியோகிப்பாளர்கள் உடனான கலந்துரையாடல்கள் ஆகியவையும் இந்த முகாம்களில் இடம் பெறும். இம்முகாம்களில், விவசாயிகள் ஒருங்கிணைந்த கையேடு, விவசாயிகள் தொழில்நுட்ப வழிகாட்டி, வேளாண் இடுபொருட்கள் ஆகியவை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
16 ஆயிரம் கிராமங்களில்..
அனைத்துத் துறைகளின் பணிகள், திட்டப் பலன்கள் மற்றும் அலுவலர்களின் முயற்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்குத் தேவையான தொழில் நுட்பச் செய்திகள் மற்றும் திட்டப் பலன்கள் விவசாயிகளின் சொந்த கிராமத்திலேயே கிடைக்கச் செய்யும் வகையில் நடத்தப்படும் இந்த உழவர் பெருவிழா, எதிர் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 13, 2012 அன்று தொடங்கி, தமிழகத்தில் உள்ள 16,564 வருவாய் கிராமங்களிலும் நடத்தப்படும். இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் விவசாய பெருங்குடி மக்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்படும். நவீன வேளாண்மையில் உள்ள சவால்களை விவசாயிகள் எதிர்கொண்டு, அவர்களை வேளாண் வல்லுநர்களாக்கி, தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை விரைவில் ஏற்படுத்த இந்த உழவர் பெரு விழா வழிவகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்..












Click it and Unblock the Notifications