அணு உலைகள் கூடவே கூடாது என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை: நல்லகண்ணு
இடிந்தகரை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் போராட்டம் நடத்தி வருவோரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரிடம் கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையின் தற்போதைய நிலை பற்றி கேட்டறிந்தனர்.
பின்னர் போராட்டக் குழுவினர் மத்தியில் நல்லகண்ணு பேசியதாவது:
கொச்சைப்படுத்தாதீர்..
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் நடைபெறுவது வரலாற்றில் இல்லாத புதுவகையான போராட்டம். ஒரே இடத்தில் இவ்வளவு நாட்கள் மக்கள் திரண்டு தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் எனில் யாரும் தூண்டிவிட்டோ பணம் கொடுத்தோ இப்படிப் போராட்டத்தை நடத்துவது சாத்தியம் அல்ல..
இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொச்சைப்படுத்தக்கூடாது. போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இவர்களது போராட்டத்தில் இதுவரை துளிகூட வன்முறையோ, அசம்பாவித சம்பவங்களோ நடைபெறவில்லை.
மக்களுக்கு அச்சம் இருப்பதால்தான் போராடுகின்றனர். இந்த அச்சத்தைப் போக்க வேண்டியது அரசுகளின் கடமை. போராட்ட குழுவினர் மற்றும் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிபந்தனையின்றி திரும்பப் பெறவேண்டும் என்றார் அவர்.
அணு உலை கூடவே கூடாது
பின்னர் செய்தியாளர்களிடம் நல்லகண்ணு கூறியதாவது:
அணு உலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் என்ன தேசத்துரோகம் செய்தார்கள்? அணு உலைகள் கூடாது என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை. அமெரிக்காவுடனான் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்துதான் மத்திய அரசில் இருந்து வெளியே வந்தோம். எங்கள் கொள்கையில் தெளிவாக இருக்கிறோம்.
கூடங்குளத்தில் முதல் இரண்டு அணு உலைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு விட்டன. எனவே, இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் மக்களோடு பேசி தீர்வு காணவேண்டும். மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பிரச்சினையை கையாள வேண்டும்.
இப்பகுதி மக்களுக்கு முறையான பேரிடர் பயிற்சி அளிக்க வேண்டும். தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதியை அனைத்து ஊராட்சிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலைகளை அமைக்ககூடாது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவையில் குரல் கொடுக்கும். மேலும் முதல்வரையும் சந்தித்து பேசுவோம் என்றார் அவர்.
தா.பாண்டியன் நிலை
கூடங்குளம் அணு உலையைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்து காவல்துறையைக் குவித்தபோது, துணிச்சலான முடிவு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிய்ன் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்திருந்தார்.
கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாகவே அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்த நிலையில் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் கூடங்குளம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கூடங்குளத்தைப் பொறுத்தவரையில் அணு உலைகள் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications