பெண்ணிடம் கவுன்சிலர் சீட் மோசடி: 'மிடாஸ்' மோகன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட 'மிடாஸ்' மோகனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
மேயர் பதவி மற்றும் அதிமுகவில் பதவி வாங்கி தருவதாக கூறி வேலூரைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.50 லட்சமும், வில்லிவாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சமும் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட 'மிடாஸ்' மதுபான ஆலை இயக்குனர் மோகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த 2 வழக்குகளில் இருந்தும் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட் மலர்விழி முன் நடந்தது. மோகனுக்கு உடல்நல குறைவு உள்ளதால் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாசு வாதாடினார். அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கோபிநாத், பாலகிருஷ்ணன் ஆகியோர் மோகனை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார். எனவே ஜாமீன் தரக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் மலர்விழி, ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மிடாஸ் மோகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும், ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.
இவர் மீது அரசு நில அபகரிப்பு வழக்கும் உள்ளது.
மன்னார்குடி ருக்குமணிபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான ரூ.27 லட்சம் மதிப்புள்ள 6,886 சதுர அடி அரசு நிலத்தை திவாகரன், அவரது உறவினர் 'மிடாஸ்' மோகன் உள்பட 12 பேர் ஆக்கிரமிப்பு செய்ததாக காளஞ்சிமேடு கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் போலீசில் புகார் தந்தார்.
இதை தொடர்ந்து திவாகரன், 'மிடாஸ்' மோகன் உள் பட 12 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது, கொலை மிரட்டல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தான் மிடாஸ் முதலில் கைது செய்யப்பட்டார். இதையடுத்தே பண மோசடி வழக்குகள் பாய்ந்தன.
கடந்த அதிமுக ஆட்சியின்போது 'மிடாஸ்' மோகன் கம்பெனியில் இருந்துதான் 90 சதவீத சரக்குகள் டாஸ்மாக் கடைக்கு வாங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சசிகலாவின் உறவினர் ராவணனுக்கு மிக நெருக்கமானவர் ஆவார்.












Click it and Unblock the Notifications