பன்றிக் காய்ச்சலுக்கு கமுக்கமாக சிகிச்சையளித்த மருத்துவமனைக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
சென்னை: பன்றிக் காய்ச்சல் தாக்கியவருக்கு சிகிச்சை அளித்தும் அது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு தெரிவிக்காத அடையாறு மேனங்குடி மருத்துவமனைக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதன் முதலாக சென்னையில் தான் பன்றிக் காய்ச்சல் பரவியது. வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த 3 பேரால் தமிழகத்திற்குள் மீண்டும் பன்றிக் காய்ச்சல் வந்துள்ளது. பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் யாராவது வந்தால் உடனே அது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் கடந்த 3 மாத காலத்தில் 17 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள், அவர்கள் பணிபுரியும் இடங்கள், குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் மாநகராட்சி மருத்துவக் குழு பரிசோதனை நடத்தி வருகிறது.
ராயப்பேட்டை சி.எஸ்.ஐ. மோசைன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மோசைன் மெட்ரிக்குலேஷன் பள்ளி, அடையாறு சங்கரா மேல்நிலைப்பள்ளி, அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி, தியாகராயநகர் வேளாங்கண்ணி பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் சுமார் 3,100 மாணவ-மாணவியருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் வசிக்கும் தேனாம்பேட்டை முதலியான்டன் தோட்டத்தில் 11 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தொடர் இருமல், காய்ச்சல் இருந்தவர்களின் சளி மாதிரி பரிசோதனைக்காக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அடையாறு மேனங்குடி மருத்துவமனையில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அந்த மருத்துவமனை இது குறித்து மாநகராட்சிக்கு தகவல் கொடுக்கவில்லை. இதனால் மாநகராட்சி சுகாதாரத் துறை அந்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.











Click it and Unblock the Notifications