கரூரில் ஜெயலலிதாவின் பேனர் கிழிப்பு: போலீசில் கொமுக புகார்!

இந்திய விடுதலைப்போரில் எண்ணற்ற தியாகச்சீலர்கள் கிளர்ந்து எழுந்து தங்கள் வாழ்வை துச்சமென மதித்து பாரதத்தின் அடிமைத் தளையை தகர்த்தெறிய அரும்பாடு பட்டனர். சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆர்ப்பரித்து, ஆங்கிலேய ஆதிக்கத்தை தடுத்தவர் தீரன் சின்னமலை.
தீரன் சின்னமலையை போரின் மூலம் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரை கைது செய்து சங்ககிரி கோட்டைக்கு அழைத்துச் சென்று தூக்கிலிட்டனர்.
அவர் தூக்கிலிடப்பட்ட சங்ககிரியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகளும், கொங்கு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி பழனிசாமியும் (மார்ச் 30, 2012) இதே கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போது, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில்( ஏப்ரல் 04 , 2012) அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடமான சங்ககிரியில் அவருக்கு நினைவுச்சின்னம் விரைவில் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து கொங்கு நாடு முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளர் இஞ்ஜினியர் ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டார்.
இதே சூட்டோடு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கரூர் பேருந்து நிலையம் அருகில் கொமுக சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது. காலையில் வைத்த பேனரை மாலையில் மர்ம நபர்கள் சிலர் கிழித்துப் போட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொங்கு நாடு முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். டிஜிட்டனல் பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் காவல் நிலையம், எஸ்.பி. அலுவலகம், திருச்சி டி.ஐ.ஜி. அலுவலகம் ஆகியவற்றில் கரூர் மாவட்டச் செயலாளர் விசா.சண்முகம் புகார் அளித்தார்.












Click it and Unblock the Notifications